அணிமூர் குப்பை கிடங்கில் கழிவுகளை புதைக்க குழி தோண்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்


அணிமூர் குப்பை கிடங்கில் கழிவுகளை புதைக்க குழி தோண்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்
x
தினத்தந்தி 20 May 2019 10:00 PM GMT (Updated: 20 May 2019 5:26 PM GMT)

அணிமூர் குப்பை கிடங்கில் கழிவுகளை புதைக்க குழி தோண்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் அப்பகுதி பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

நாமக்கல், 

திருச்செங்கோடு அருகே உள்ள அணிமூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்து மனுக்கள் போடும் பெட்டியில் கோரிக்கை மனு ஒன்றை போட்டு சென்றனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது :-

எங்களது பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக திருச்செங்கோடு நகராட்சி சார்பில் உரிய அனுமதி பெறாமல் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சுவாச கோளாறு உள்ளிட்ட நோய்கள் ஏற்பட்டு அவதி அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் அங்கு நகராட்சி நிர்வாகத்தினர் ரசாயன கழிவுகள், மருத்துவ கழிவுகள், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கழிவுகள் போன்றவற்றை கொட்டி புதைக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த குப்பை கிடங்கு தொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ளதால், தாங்கள் (கலெக்டர்) பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சு மற்றும் ரசாயன கழிவுகள், மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட கழிவுகளை கொட்டி புதைப்பதற்கு குழி தோண்டுவதை தடுத்து நிறுத்தி, எந்த ஒரு புதிய திட்டங்களையும் செயல்படுத்தாத வண்ணம் ஆவன செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தனர்.

Next Story