டயர் வெடித்ததால் விபத்து தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி


டயர் வெடித்ததால் விபத்து தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
x
தினத்தந்தி 20 May 2019 9:45 PM GMT (Updated: 20 May 2019 6:30 PM GMT)

வண்டலூர் அருகே டயர் வெடித்ததால் தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் வாலிபர் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த அவரது நண்பருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வண்டலூர்,

கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 27). அதே பகுதியை சேர்ந்தவர் சிவராஜ் (28). இருவரும் நண்பர்கள்.

நேற்று முன்தினம் ஒரகடம் அருகே வேலை சம்பந்தமாக நேர்முகத்தேர்வில் கலந்து கொண்ட இருவரும் மீண்டும் அதே மோட்டார் சைக்கிளில் வண்டலூர் மேம்பாலம் வழியாக சிதம்பரம் நோக்கி சென்றனர். வண்டலூர் அருகே வரும்போது திடீரென மோட்டார் சைக்கிளின் டயர் வெடித்தது.

உடனே மோட்டார் சைக்கிள் சாலை ஓரமாக இருந்த தடுப்புச்சுவரில் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த சிவராஜ், மணிவண்ணன் ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்தனர். இதில் சிவராஜ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

படுகாயம் அடைந்த மணிவண்ணனை அக்கம்பக்கத்தினர் மீட்டு குரோம்பேட்டையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். விபத்து குறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி.ரோடு சிக்னல் அருகே நேற்று முன்தினம் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சாலையை கடக்க முயன்றார். அப்போது அதே திசையில் வந்த லாரி ஒன்று கண் இமைக்கும் நேரத்தில் அவர் மீது பயங்கரமாக மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி அந்த நபர் பரிதாபமாக இறந்தவர். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story