தூத்துக்குடியில் வாலிபரை திருமணம் செய்த திருநங்கைக்கு பதிவு சான்றிதழ் - ஐகோர்ட்டு உத்தரவுப்படி வழங்கப்பட்டது


தூத்துக்குடியில் வாலிபரை திருமணம் செய்த திருநங்கைக்கு பதிவு சான்றிதழ் - ஐகோர்ட்டு உத்தரவுப்படி வழங்கப்பட்டது
x
தினத்தந்தி 20 May 2019 11:00 PM GMT (Updated: 20 May 2019 7:48 PM GMT)

தூத்துக்குடியில் வாலிபரை திருமணம் செய்த திருநங்கைக்கு ஐகோர்ட்டு உத்தரவுப்படி பதிவு சான்றிதழ் வழங்கப்பட்டது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி தாளமுத்துநகர் தாய் நகரைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் மகன் அருண்குமார் (வயது 22). இவர் டிப்ளமோ எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் படித்து உள்ளார். இவரும், தூத்துக்குடி-எட்டயபுரம் ரோட்டில் உள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த ஸ்ரீஜா (20) என்ற திருநங்கையும் காதலித்து, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தூத்துக்குடி சிவன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

அதன் பின்னர் அவர்கள், திருமணத்துக்கான திருமண பதிவு சான்றிதழ் வாங்குவதில் சில சிக்கல்கள் ஏற்பட்டன. திருமணத்தை சட்டப்படி பதிவு செய்ய அவர்கள் பல முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் முடிய வில்லை.

கடைசியாக அவர்கள் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, அருண்குமார்-ஸ்ரீஜா திருமணத்தை பதிவு செய்து கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று அருண்குமார், ஸ்ரீஜா தூத்துக்குடி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் தங்களது திருமணத்தை சட்டப்படி பதிவு செய்து தர கோரி விண்ணப்பித்தனர்.

அதன் பின்னர் அவர்களுக்கு திருமண பதிவு சான்றிதழ் வழங்கப்பட் டது. இதுகுறித்து அவர்கள் கூறும் போது, பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு எங்களது திருமணத்தை சட்டப்படி பதிவு செய்து, அதற்கான சான்றிதழை வாங்கி உள்ளோம். இது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறினார்கள். தொடர்ந்து அவர்கள் மோதிரம் மாற்றி கொண்டனர்.


Next Story