மனைவி பிரிந்து சென்றதால் வேதனை: புதுமாப்பிள்ளை தூக்கு போட்டு தற்கொலை

மனைவி பிரிந்து சென்றதால் வேதனை அடைந்த புதுமாப்பிள்ளை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பாகூர்,
புதுவை இடையார்பாளையம் பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் அன்புகுமார்(வயது27). டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கும் பி.எஸ்.பாளையத்தை சேர்ந்த முகில் அரசிக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது.திருமணம் முடிந்த சில நாட்களிலேயே கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கணவனிடம் கோபித்துக்கொண்டு முகில் அரசி தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.மனைவி பிரிந்து சென்றது முதல் அன்புகுமார் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.நேற்று வழக்கம் போல் அன்புகுமாரின் தாய்,தந்தை இருவரும் காய்கறி வியாபாரத்துக்கு சென்று விட்டனர்.
பிற்பகலில் அவர்கள் இருவரும் வீடு திரும்பிய போது அன்புகுமார் மின்விசிறியில் தூக்கு போட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அன்புகுமாரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அன்புகுமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story






