பிரியாணி கடையில் தகராறு: ஆட்டோ டிரைவரை கொலை செய்த 4 பேர் கைது


பிரியாணி கடையில் தகராறு: ஆட்டோ டிரைவரை கொலை செய்த 4 பேர் கைது
x
தினத்தந்தி 20 May 2019 11:00 PM GMT (Updated: 20 May 2019 8:51 PM GMT)

திருச்சியில் பிரியாணி கடையில் ஏற்பட்ட தகராறில் ஆட்டோ டிரைவரை அடித்து கொலை செய்த 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருச்சி,

திருச்சி மண்ணச்சநல்லூர் பிச்சாண்டார்கோவில் பகுதியை சேர்ந்தவர் அப்துல்லா(வயது 35). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று முன்தினம் மாலை திருவானைக்காவலில் உள்ள ஒரு மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு சவாரி சென்றார். நிகழ்ச்சியில் பங்கேற்றவர் களுக்கு அருகே உள்ள கடையில் பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டு இருந்தது. ஆனால், பிரியாணி தீர்ந்து விட்டதால் நிகழ்ச்சியை நடத்தியவர்களின் உறவுக்கார பெண் ஒருவரும், ஆட்டோ டிரைவர் அப்துல்லாவும் பிரியாணி வாங்க அந்த கடைக்கு சென்றனர்.

அங்கிருந்த கடை ஊழியர்களிடம் ஆர்டர் கொடுத்த அளவுக்கு பிரியாணி வழங்கப்படவில்லை என்று கூறி அந்த பெண் சத்தம்போட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அதே ஓட்டலில் ஸ்ரீரங்கம் அம்பேத்கர் நகரை சேர்ந்த நாகராஜ்(39) சாப்பிட்டு கொண்டு இருந்தார். அவர் அந்த பெண்ணிடம் ஏன் இப்படி சத்தம் போடுகிறாய்? என்று கேட்டுள்ளார். இதனால், அந்த பெண்ணுக்கும் நாகராஜிக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த நாகராஜ் அந்த பெண் மீது இடித்துள்ளார்.

இதனை கண்ட ஆட்டோ டிரைவர் அப்துல்லா, நாகராஜை தாக்கி உள்ளார். பின்னர் அங்கிருந்து சென்ற நாகராஜ் தனது நண்பர்கள் 3 பேருடன் பிரியாணி கடைக்கு வந்தார். பின்னர் அங்கு நின்று கொண்டிருந்த அப்துல்லாவை மரப்பலகை மற்றும் கைகளால் 4 பேரும் சரமாரியாக தாக்கினார்கள். இதில் படுகாயம் அடைந்த அப்துல்லா திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.

இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து, அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்கள். இதனை தொடர்ந்து அப்துல்லாவை கொலை செய்ததாக ஸ்ரீரங்கம் அம்பேத்கர் நகரை சேர்ந்த நாகராஜ், கோகுல்நாத், தயாளன்(23), முன்னா(22) ஆகிய 4 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி சிறையில் அடைத்தனர். 

Next Story