எழுமலையில் பரிதாபம்: திருமண மண்டபத்தில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி


எழுமலையில் பரிதாபம்: திருமண மண்டபத்தில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி
x
தினத்தந்தி 20 May 2019 10:45 PM GMT (Updated: 20 May 2019 10:45 PM GMT)

உசிலம்பட்டி அருகே எழுமலையில் திருமண மண்டபத்தில் இருந்து தவறி கீழே விழுந்து மதுரையை சேர்ந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துபோனார்.

உசிலம்பட்டி,

உசிலம்பட்டி அருகே உள்ள எழுமலையை சேர்ந்தவர் ரமேஷ்பாண்டி.

இவர் தன்னுடைய குழந்தைகளுக்கு காதணி விழா வைத்திருந்தார். இந்த காதணி விழாவை அவர் எழுமலை பேரூராட்சிக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் நடத்த இருந்தார். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக ரமேஷ்பாண்டியின் மைத்துனரான கவுதம், தனது நண்பர்களான மதுரையைச் சேர்ந்த சிலருடன் எழுமலைக்கு நேற்று முன்தினம் இரவு வந்தார். அங்கு காதணி விழா நடைபெற இருந்த திருமண மண்டபத்தின் மாடிக்கு கவுதமும், அவரது நண்பர்களும் சென்றனர். மாடியில் அமர்ந்து அவர்கள் பேசி கொண்டிருந்தனர்.

இந்தநிலையில் நண்பர்கள் பேசி கொண்டிருந்தபோது, அவர்களில் ஒருவரான மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த பால்பாண்டி மகன் கண்ணன் (வயது 24) என்பவர் தனியாக மாடியில் இருந்து கீழே இறங்க முற்பட்டதாக தெரிகிறது. அப்போது மாடி படி தெரியாமல் கண்ணன் கால் தவறி கீழே விழுந்துள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த கண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துபோனார். இந்த சம்பவம் குறித்து எழுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜாஸ்மின் மும்தாஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story