கடன் பிரச்சினையால் விரக்தி: தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை


கடன் பிரச்சினையால் விரக்தி: தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 20 May 2019 10:50 PM GMT (Updated: 20 May 2019 10:50 PM GMT)

நாகமலைபுதுக்கோட்டையில் கடன் பிரச்சினையால் விரக்தியடைந்த தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

நாகமலைபுதுக்கோட்டை,

மதுரையை அடுத்த நாகமலைபுதுக்கோட்டை என்.ஜி.ஓ. காலனி, அன்னை தெரசா காலனியில் வசித்து வந்தவர் வெங்கடசுப்பிரமணியன் (வயது 40). இவருடைய மனைவி மீனாட்சி (36). காதல் திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு குழந்தை இல்லை. வெங்கடசுப்பிரமணியன் முனைவர் பட்டம் பெற்றவர். அவர் அதே பகுதியில் தொழில் முனைவோருக்கான பயிற்சி மையம் வைத்து நடத்தி வந்தார்.

தொழில் தொடர்பாக அவர் சிலரிடம் கடன் வாங்கியிருந்தாராம். ஆனால் வாங்கிய கடனை கட்ட முடியாமல் அவர் தவித்து வந்தார். கடன் பிரச்சினையால் மன வேதனையில் வெங்கடசுப்பிரமணியன் இருந்து வந்தார்.

இந்தநிலையில் சம்பவத்தன்று வெங்கடசுப்பிரமணியனும், அவரது மனைவி மீனாட்சியும் வீட்டினுள் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர். அவர்கள் தற்கொலை செய்து 2 நாட்களான நிலையில் அந்தபகுதியில் துர்நாற்றம் வீசியது. இதைத்தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் நேற்று நாகமலைபுதுக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் வந்து வெங்கடசுப்பிரமணியன் வீட்டை திறந்து பார்த்தபோது தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களது பிணத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story