பொன்னமராவதி அருகே பல ஆண்டுகளுக்கு முந்தைய 7 வட்டக்கற்கள் கண்டெடுப்பு


பொன்னமராவதி அருகே பல ஆண்டுகளுக்கு முந்தைய 7 வட்டக்கற்கள் கண்டெடுப்பு
x
தினத்தந்தி 21 May 2019 10:30 PM GMT (Updated: 21 May 2019 7:57 PM GMT)

பொன்னமராவதி அருகே பல ஆண்டுகளுக்கு முந்தைய 7 வட்டக்கற்கள் கண்டெடுக்கப்பட்டது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டம், செவலூர் ஊராட்சி, மலையடிப்பட்டி கிராமத்தில் உள்ள காட்டுப்பகுதியில் பழமை வாய்ந்த கோவில் ஒன்று அமைந்திருப்பதாக அதே ஊரை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் அளித்த தகவலை தொடர்ந்து புதுகோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகத்தின் நிறுவனர் மங்கனூர் மணிகண்டன், உறுப்பினர்கள் இயற்கை ஆர்வலர் மணிகண்டன், ஆசிரியர் சோலச்சி திருப்பதி உள்ளிட்ட குழுவினர் காட்டுப்பகுதிக்கு சென்று கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் 7 வட்டக்கற்கள் கண்டெடுக்கப்பட்டன.

இதுகுறித்து மணிகண்டன் கூறுகையில், மலையடிப்பட்டி நெடுமலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் மேலச்சுங்காடு மொக்காண்டி கொம்படி கோவில் பெருங்கற்கால நினைவு சின்னமான வட்டக்கற்கள் மையத்தில் அமைக்கப்பட்டு வழிபாட்டில் இருந்து உள்ளது. கோவிலின் முக்கிய வழிபாட்டு பகுதியில் இருந்த கல்வட்டம் மற்றும் கல்திட்டை முழுமையாக அகற்றப்பட்டு, அதில் இருந்த கற்பலகைகள் கோவிலுக்கு நேர் எதிர்புறத்தில் கிடத்தப்பட்டு பலி பீடமாக பயன்படுத்தப்பட்டு உள்ளது. அதன் அருகாமையில் இருக்கும் 2 வட்டக்கற்கள் முழுமையாக சிதைக்கப்படாமல் கல்லறை அமைப்புகளுடன் உள்ளது.

இத்தகைய வழிபாட்டு முறை கோவில் கட்டுமான அமைப்புகளுக்கும் உருவ வழிபாட்டுக்கும் முந்தையது. பெரும்பாலும் 7 வட்டக்கற்கள் முழுமையாகவும், பகுதியளவு சிதைந்த நிலையில் அடையாளம் காணப்பட்டு உள்ளது.

3 ஆயிரம் ஆண்டுகளுக்கு...

இந்த வட்டக்கற்கள் ஒட்டைப்பிச்சான் வகையறா எனப்படும் முத்தரையர்களால் வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த வட்டக்கற்கள் சுமார் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகள் வரை பழமையானது என கணிக்கப்பட்டுள்ளது. இதுவரை வெளியிடப்பட்ட அறிவியல் பூர்வ காலக்கணிப்புகளின்படி தற்போது நம்மால் அடையாளம் காணப்பட்ட வட்டக்கற்கள் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story