பொங்கலூரில், மொபட் திருடிய 2 பேர் கைது


பொங்கலூரில், மொபட் திருடிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 21 May 2019 11:00 PM GMT (Updated: 21 May 2019 9:28 PM GMT)

பொங்கலூரில் மொபட் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பொங்கலூர்,

பொங்கலூர் காந்திநகரை சேர்ந்த ஆரோக்கியராஜ் என்பவரது மகன் ஜான்ஜோசப் (வயது 55). இவர் நேற்று முன்தினம் கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சக்திநகர் விநாயகர்கோவில் அருகே தனது மொபட்டை நிறுத்தி விட்டு கடைக்கு சென்றிருந்தார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது அங்கு நிறுத்தியிருந்த அவரது மொபட்டை காணவில்லை. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.

அவர் கடைக்கு சென்றிருந்த சமயத்தில் யாரோ மர்ம ஆசாமிகள் மொபட்டை திருடி விட்டு தப்பி விட்டனர். இது குறித்து அவினாசிபாளையம் போலீசில் அவர் புகார் தெரிவித்தார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதில் மொபட்டை திருடியவர்கள் பொங்கலூர் காட்டூர் ரோட்டில் ஒர்க்‌ஷாப் வைத்து நடத்தி வரும் பாலசுப்பிரமணியம் என்பவரது மகன் வன்னியராஜ்(38), சக்திநகரை சேர்ந்த ராஜலிங்கம் என்பவரது மகன் ரகுபதி(35) என்பதும் தெரியவந்தது. இதை தொடர்ந்து 2 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று கொடுவாய் பொள்ளாச்சி ரோடு பிரிவில் இருவரும் நின்றுகொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் 2 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர். 

Next Story