சேலம் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி யாருக்கு? பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று ஓட்டு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்குகிறது


சேலம் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி யாருக்கு? பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று ஓட்டு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்குகிறது
x
தினத்தந்தி 22 May 2019 11:30 PM GMT (Updated: 22 May 2019 4:31 PM GMT)

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது.

சேலம், 

சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் கடந்த மாதம் 18–ந் தேதி நடைபெற்றது. தொகுதியில் மொத்தம் 16 லட்சத்து 11 ஆயிரத்து 982 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 12 லட்சத்து 48 ஆயிரத்து 809 வாக்காளர்கள் மட்டும் தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளனர். இது 77.57 சதவீதம் ஆகும். இதையடுத்து வாக்கு எண்ணிக்கைக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான கருப்பூரில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிக்கு கொண்டு சென்று சட்டமன்ற தொகுதிகள் வாரியாக தனித்தனி அறையில் வைக்கப்பட்டன.

இந்தநிலையில், சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. ஒரு சுற்றுக்கு 14 மேஜை அடிப்படையில் வாக்குகள் எண்ணப்படுகிறது. இதில் குறைந்த வாக்குச்சாவடிகள் கொண்ட சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு 20 சுற்றுகள் எண்ணப்படும். அதிக வாக்குச்சாவடிகள் கொண்ட ஓமலூர் தொகுதிக்கு 25 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படுகிறது.

இதையொட்டி மாநகர போலீஸ் கமி‌ஷனர் சங்கர் தலைமையில் 2 துணை கமி‌ஷனர்கள், 12 உதவி கமி‌ஷனர்கள், 20 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்–இன்ஸ்பெக்டர்கள் என சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை மையத்தில் அமைக்கப்பட்டுள்ள 14 மேஜைகளும் மற்றும் வேட்பாளர்கள் ஒவ்வொரு சுற்றிலும் பெற்ற வாக்குகள் விவரங்களை எவ்வாறு கணக்கிடுவது? என்பது குறித்து வாக்கு எண்ணும் மைய அலுவலர்களுக்கு ஏற்கனவே பயிற்சி அளிக்கப்பட்டது. வாக்கு எண்ணும் பணியில் 1,500–க்கும் மேற்பட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

சேலம் நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரையில் முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும். இதற்காக 4 மேஜைகள் போடப்படுகின்றன.

அதாவது, சேலம் வடக்கு, சேலம் தெற்கு, சேலம் மேற்கு, வீரபாண்டி, ஓமலூர், எடப்பாடி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் வாரியாக தபால் ஓட்டுகள் எண்ணி தனித்தனியாக பிரிக்கப்படும். அதன்பிறகு ஒவ்வொரு வேட்பாளரும் எத்தனை தபால் ஓட்டுகள் பெற்றிருக்கிறார்கள்? என்ற விவரம் தெரிவிக்கப்படும்.

வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்பதற்காக ஒவ்வொரு வேட்பாளரின் சார்பில் வாக்கு எண்ணிக்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள முகவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அந்த அடையாள அட்டைகளை வைத்திருக்கும் முகவர்கள் மட்டும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

வாக்கு எண்ணும் மையத்திற்குள் வேட்பாளர்களின் முகவர்கள் செல்போன் எடுத்து செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்ட இந்திய தேர்தல் ஆணையத்தால் தடை செய்யப்பட்டுள்ள எந்த பொருட்களையும் எடுத்து செல்வதற்கு அனுமதி இல்லை என்றும், சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் பணிகள் அமைதியான முறையில் நடைபெறுவதற்கு வேட்பாளர்கள், அவர்களின் முகவர்கள், பொதுமக்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனவும், மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான ரோகிணி தெரிவித்துள்ளார்.

தேர்தல் முடிவுகளை அவ்வப்போது தெரிந்து கொள்வதற்காக அரசியல் கட்சியினர் அதிகளவில் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி முன்பு வருவார்கள் என்பதால் அங்கு தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனைக்கு பிறகே வேட்பாளர்களின் முகவர்கள் உள்பட அனைவரும் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் கே.ஆர்.எஸ்.சரவணன், தி.மு.க. சார்பில் எஸ்.ஆர்.பார்த்திபன், அ.ம.மு.க. சார்பில் வீரபாண்டி எஸ்.கே.செல்வம், மக்கள் நீதி மய்யம் சார்பில் பிரபு மணிகண்டன், நாம் தமிழர் கட்சி சார்பில் அ.ராசா மற்றும் சுயேச்சைகள் உள்பட 22 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். குறிப்பாக அ.தி.மு.க.– தி.மு.க. இடையே தான் அதிக போட்டி இருக்கும். இவர்களில் வெற்றி வாகை சூடப்போவது யார்? என்பது இன்றைய வாக்கு எண்ணிக்கையின் முடிவில் தெரிந்துவிடும்.


Next Story