புதுக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தனியார் நிறுவன மேலாளர் பலி


புதுக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தனியார் நிறுவன மேலாளர் பலி
x
தினத்தந்தி 22 May 2019 10:45 PM GMT (Updated: 22 May 2019 7:54 PM GMT)

புதுக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தனியார் நிறுவன மேலாளர் பலியானார்.

தூத்துக்குடி,

மோட்டார் சைக்கிள் விபத்தில் தனியார் நிறுவன மேலாளர் பலியான சம்பவம் குறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-

தூத்துக்குடி அருகே உள்ள சாயர்புரம் சேர்வைக்காரன்மடத்தை சேர்ந்தவர் ராஜாசிங் மகன் கிங்ஸ்லின் (வயது 41). இவர் தூத்துக்குடி அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்தார்.

இவருக்கு ஜெயா என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு கிங்ஸ்லின் தனது மோட்டார் சைக்கிளில் தூத்துக்குடி-நெல்லை பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டு இருந்தார்.

புதுக்கோட்டை அருகே உள்ள மறவன்மடம் சந்திப்பு பகுதியில் மோட்டார் சைக்கிள் சென்ற போது, அந்த பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவர் மது போதையில் சாலையை கடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் கிங்ஸ்லின் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் விக்னேஷ் மீது மோதி, சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் கிங்ஸ்லின் பரிதாபமாக உயிர் இழந்தார். விக்னேசுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story