மாமல்லபுரம் அருகே கார் - மோட்டார் சைக்கிள் மோதல்; 2 வாலிபர்கள் பலி


மாமல்லபுரம் அருகே கார் - மோட்டார் சைக்கிள் மோதல்; 2 வாலிபர்கள் பலி
x
தினத்தந்தி 22 May 2019 10:45 PM GMT (Updated: 22 May 2019 8:14 PM GMT)

மாமல்லபுரம் அருகே கார் மீது மோட்டார் சைக்கிள் மோதி 2 வாலிபர்கள் பலியானார்கள்.

மாமல்லபுரம், 

புதுச்சேரி பந்துரெட்டி புரத்தை சேர்ந்தவர் தினேஷ் (வயது 21). இவருடைய நண்பர் ரஞ்சித்குமார் (24). நேற்றுமுன்தினம் இரவு இருவரும் சென்னை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தனர்.

கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரத்தை அடுத்த கடும்பாடி அருகே மோட்டார் சைக்கிள் சென்று கொண்டு இருந்தது. இரவு 11 மணியளவில் சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற ஒரு கார் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் 2 வாலிபர்களும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.

இதில் படுகாயம் அடைந்த தினேஷ், ரஞ்சித்குமார் இருவரும் அதே இடத்தில் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் மாமல்லபுரம் போலீசார் விரைந்து சென்று விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story