மதுரவாயல் அருகே 2 குழந்தைகளை கொன்றுவிட்டு விஷம் குடித்த தாய் கடன் தொல்லையால் விபரீதம்


மதுரவாயல் அருகே 2 குழந்தைகளை கொன்றுவிட்டு விஷம் குடித்த தாய் கடன் தொல்லையால் விபரீதம்
x
தினத்தந்தி 22 May 2019 11:30 PM GMT (Updated: 22 May 2019 8:19 PM GMT)

மதுரவாயல் அருகே, கடன் தொல்லையால் விஷம் கொடுத்தும், கழுத்தை நெரித்தும் 2 குழந்தைகளை கொன்று விட்டு, தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பூந்தமல்லி, 

சென்னை மதுரவாயலை அடுத்த வானகரம் தாமஸ் தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 2-வது தளத்தில் வசித்து வந்தவர் சிபிராஜ் (வயது 38). கேரள மாநிலத்தை சேர்ந்த இவர், சினிமாத்துறை மற்றும் பல்வேறு நிறுவனங்களுக்கு பைனான்ஸ் வாங்கி கொடுத்து அதில் கமிஷன் பெறும் தொழில் செய்து வந்தார்.

இவருடைய 2-வது மனைவி சைஜா(29). இவர்களுக்கு ஸ்ரீலட்சுமி(3½) என்ற மகளும், ஆதிதேஷ்(2) என்ற மகனும் இருந்தனர். உடல் நலக்குறைவால் கடந்த பிப்ரவரி மாதம் சிபிராஜ் இறந்துவிட்டார். இதனால் போதிய வருமானம் இல்லாமலும், கடன் தொல்லையாலும் சைஜா தனது பிள்ளைகளுடன் பரிதவித்து வந்துள்ளார்.

இதையடுத்து சைஜா மற்றும் அவரது குழந்தைகளை கேரளாவுக்கு அழைத்து செல்வதற்காக நேற்று காலை அவரது உறவினர் ஜுனைத் என்பவர் சைஜா வீட்டுக்கு வந்தார். நீண்டநேரம் தட்டியும் கதவை திறக்காததால் சந்தேகமடைந்த அவர், ஜன்னல் வழியாக பார்த்தார்.

அப்போது கட்டிலில் 3 பேரும் மயங்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று 3 பேரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தைகள் ஸ்ரீலட்சுமி, ஆதிதேஷ் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சுய நினைவு இன்றி கிடந்த சைஜா, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

சிறுநீரகம் பழுதடைந்ததால் உடல் நிலை மோசமடைந்த சிபிராஜ், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் பிப்ரவரி மாதம் இறந்துவிட்டார். அதன்பிறகு சைஜா, தனது 2 குழந்தைகளையும் மிகுந்த சிரமத்துடன் வளர்த்து வந்தார்.

சிபிராஜ் ஏற்கனவே அதிக அளவில் கடன் வாங்கி இருந்ததால், கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்பக்கேட்டு சைஜா வீடு தேடி வரத்தொடங்கினர். அத்துடன் காருக்கான கடன் தொகையும் கட்டவேண்டும் என்று நெருக்கடி கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

வருமானமும் இல்லாமல், குழந்தைகளை வைத்துக்கொண்டு வேலைக்கும் செல்ல முடியாமலும் மிகவும் கஷ்டத்துடன் இருந்த சைஜா, குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்தார்.

அதன்படி நேற்று முன்தினம் இரவு குளிர்பானத்தில் விஷம் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தார். பின்னர் அவர்களின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். அதன்பிறகு தானும் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் அந்த விஷத்தை குடித்த சைஜா, தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிபிராஜின் முதல் மனைவியிடம் கடன் தொல்லை குறித்து சைஜா மிகுந்த மன உளைச்சலுடன் போனில் பேசினார். அதற்கு அவர், தனது தம்பியை அனுப்பி வைப்பதாகவும், அவருடன் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு கேரளாவுக்கு வந்துவிடும்படியும் கூறினார்.

அதற்கு சம்மதம் தெரிவித்த சைஜா, திடீரென குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story