ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கோடைத்திருநாள் தொடங்கியது


ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கோடைத்திருநாள் தொடங்கியது
x
தினத்தந்தி 22 May 2019 10:30 PM GMT (Updated: 22 May 2019 8:59 PM GMT)

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கோடைத் திருநாள் தொடங்கியது.

திருச்சி,

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலும் ஒன்றாகும். பூலோக வைகுண்டம் எனவும், பெரிய கோவில் என போற்றப்படும் இக்கோவில் வளாகத்தில் ரெங்கநாச்சியார்(தாயார்) சன்னதி உள்ளது. இந்த சன்னதியில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் கோடைத்திருநாள் என்னும் பூச்சாற்று உற்சவம் 10 நாட்களும், தொடர்ந்து 7 நாட்கள் ‘வசந்தம்’ திருநாளும் நடைபெறும். இந்த ஆண்டுக்கான கோடைத்திருநாள் ரெங்கநாச்சியார் சன்னதியில் நேற்று தொடங்கியது. வருகிற 31-ந் தேதி வரை இத்திருநாள் நடைபெறுகிறது.

மூலஸ்தான சேவை கிடையாது

வருகிற 26-ந் தேதி வரை வெளிக்கோடைத் திருநாளும், 27-ந் தேதி முதல் 31-ந்தேதி வரை உள்கோடை திருநாளும் நடைபெறுகிறது. வெளிக்கோடை உற்சவத்தின் முதல் நாளான நேற்று உற்சவர் ரெங்கநாச்சியார் மாலை 6.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு இரவு 7 மணிக்கு வெளிக்கோடை மண்டபத்தை அடைந்தார். அங்கு புஷ்பம் சாத்துப்படி கண்டருளிய பின் இரவு 8.30 மணிக்கு நாலுகால் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு 8.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

வெளிக்கோடை உற்சவத்தையொட்டி தினமும் மாலை 5 மணி முதல் மாலை 6.30 மணி வரையும், இரவு 8.30 மணிக்கு மேலும் தாயார் சன்னதியில் மூலஸ்தான சேவை கிடையாது.

உள்கோடை உற்சவம்

உள்கோடை உற்சவ நாட்களில் உற்சவர் ரெங்கநாச்சியார் தினமும் மாலை 6 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு வெளிக்கோடை மண்டபத்தை சென்றடை கிறார். அங்கு புஷ்பம் சாத்துப்படி கண்டருளியபின் இரவு 7.30 மணிக்கு நாலுகால் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு 7.45 மணிக்கு உள்கோடை ஆஸ்தான மண்டபத்தை சென்றடைகிறார். அங்கிருந்து இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். பூச்சாற்று உற்சவத்தையொட்டி தினமும் மாலை 4.30 மணி முதல் 6 மணிவரை தாயார் சன்னதியில் மூலஸ்தான சேவை கிடையாது. 31-ந்தேதி வீணை வாத்தியம் கிடையாது. இரவு 8.30 மணிக்கு மேல் மூலவர் சேவை கிடையாது.

வசந்த உற்சவம்

ரெங்கநாச்சியார் வசந்த உற்சவம் வருகிற ஜூன் 1-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை நடைபெறுகிறது. வசந்த உற்சவ நாட்களில் தாயார் தினமும் மாலை 6 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு வசந்த மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு அலங்காரம் வகையறா கண்டருளிய பின் இரவு 8.30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். விழா ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் ஜெயராமன், உதவி ஆணையர் கந்தசாமி மற்றும் அறங்காவலர்கள், ஊழியர்கள் செய்து வருகிறார்கள்.


Next Story