வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு தபால் ஓட்டுகள் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைப்பு


வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு தபால் ஓட்டுகள் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைப்பு
x
தினத்தந்தி 22 May 2019 11:00 PM GMT (Updated: 22 May 2019 9:52 PM GMT)

தபால் ஓட்டுகள் போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஈரோடு,

ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் கடந்த மாதம் 18-ந் தேதி நடைபெற்றது. இந்த தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போலீசார் உள்ளிட்டோருக்கு தபால் ஓட்டுகள் போட அனுமதி வழங்கப்பட்டது. அவர்களுக்கு வாக்குச்சீட்டும் ஏற்கனவே வழங்கப்பட்டது. மேலும், தேர்தலுக்கான பயிற்சி முகாம் நடத்தப்பட்டபோது தபால் ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டது. இதில் ஏராளமான அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தங்களது ஓட்டுகளை போட்டனர். மேலும், போலீசாருக்கும் தபால் ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டது.

இதேபோல் தேர்தல் முடிந்தபிறகும் தபால் மூலமாக பலர் ஓட்டுகளை ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அரசியல் கட்சியினர் முன்னிலையில் தபால் ஓட்டுகள் பிரித்து அந்தந்த சட்டமன்ற தொகுதிக்கான பெட்டியில் போடப்பட்டது. அதன்படி நேற்று வரை வரப்பெற்ற தபால் ஓட்டுகள் பெட்டிகளில் போடப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

இந்த நிலையில் தபால் ஓட்டுகள் வாக்கு எண்ணிக்கை மையமான சித்தோடு ஐ.ஆர்.டி.டி. கல்லூரிக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து நேற்று மாலை அனுப்பி வைக்கப்பட்டது. ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன், மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் ஆகியோர் முன்னிலையில், தபால் ஓட்டுகள் உள்ள பெட்டிகள் போலீஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டது. இதில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அதன்பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஐ.ஆர்.டி.டி. கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு ஒரு அறையில் தபால் ஓட்டுகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

Next Story