சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் மாற்றுத்திறனாளிகள், பெண்கள் பெட்டியை இணைக்க வேண்டு்ம் பயணிகள் கோரிக்கை


சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் மாற்றுத்திறனாளிகள், பெண்கள் பெட்டியை இணைக்க வேண்டு்ம் பயணிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 23 May 2019 10:30 PM GMT (Updated: 23 May 2019 7:14 PM GMT)

சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் பெட்டியை இணைக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருக்காட்டுப்பள்ளி,

திருச்சியில் இருந்து சென்னைக்கு காலை 10 மணிக்கு தஞ்சை வழியாக சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இதே போல் மறு மார்க்கத்தில் இந்த ரெயில் தினமும் காலை 8 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு தஞ்சை வழியாக திருச்சிக்கு இயக்கப்படுகிறது. இந்த ரெயிலில் 8 குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளும், 9 முன்பதிவு பெட்டிகளும் முதல் வகுப்பு குளிர்சாதன வசதி கொண்ட ஒரு பெட்டியும் முன்பதிவில்லாமல் பயணம் செய்யக்கூடிய 2 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த ரெயில் பகல் நேர ரெயில் என்பதால் முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள், பெண்கள் அதிக அளவில் பயணம் செய்யும் ரெயிலாக சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் விளங்குகிறது.

கைப்பிடிகள்

சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் பெட்டியும் பெண்களுக்கான பெட்டியும் இணைக்கப்படுவது இல்லை. தற்போது இணைக்கப்பட்டுள்ள பெட்டிகளில் என்ஜினுக்கு அடுத்து உள்ள பெட்டியிலும், கார்டு பெட்டிக்கு முன்பு உள்ள முன்பதிவில்லா பெட்டியிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக சிறிய அளவில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது.

ஆனால் பெண்கள் பெட்டி இல்லை. மாற்றுத்திறனாளிகளுக்கு வடிவமைக்கப்பட்ட பெட்டியில் அவர்கள் ஏறி இறங்க தனி வசதிகள் கைப்பிடிகள் பொருத்தப்பட்டிருக்கும். கழிவறை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். பெண்கள் பெட்டி கார்டு பெட்டிக்கு அருகில் இணைக்கப்பட்டுள்ளதால் தனியாக பயணம் செய்வோருக்கு பாதுகாப்பாக இருக்கும். எனவே ரெயில்வே நிர்வாகம் சோழன்எக்ஸ்பிரஸ் ரெயிலில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கான பெட்டியை இணைக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story