வாக்குப்பதிவு எந்திரத்தின் ‘சீல்’ உடைக்கப்பட்டு இருந்ததால் பா.ம.க. முகவர்கள் வெளிநடப்பு - அதிகாரிகள் பேச்சுவார்த்தை


வாக்குப்பதிவு எந்திரத்தின் ‘சீல்’ உடைக்கப்பட்டு இருந்ததால் பா.ம.க. முகவர்கள் வெளிநடப்பு - அதிகாரிகள் பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 23 May 2019 11:00 PM GMT (Updated: 23 May 2019 7:25 PM GMT)

வாக்குப்பதிவு எந்திரத்தின் சீல் உடைக்கப்பட்டு இருந்ததால் பா.ம.க. முகவர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர்,

அரக்கோணம் தொகுதியில் பதிவான வாக்குகள் நேற்று ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் எண்ணப்பட்டன. அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி அரக்கோணம், சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு, காட்பாடி, திருத்தணி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. காலை முதல் வாக் குகள் எண்ணப்பட்டு வந்தன.

இந்த நிலையில் பிற்பகல் 3 மணி அளவில் திருத்தணி சட்டமன்ற தொகுதியில் உள்ள சொரத்தூர் வாக்குச்சாவடி மையத்தில் பயன்படுத்திய வாக்குப்பதிவு எந்திரத்தின் ‘சீல்’ உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் பா.ம.க. மற்றும் சுயேச்சை வேட்பாளர்களின் முகவர்கள் திடீரென வெளிநடப்பு செய்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் அதிகாரிகள் அங்கு வந்து முகவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது முகவர்கள், சில வாக்குப்பதிவு எந்திரங்களின் ‘சீல்’ உடைக்கப்பட்டுள்ளது. எனவே, இதில் முறைகேடு நடந்துள்ளது. இதுபற்றி அதிகாரிகளிடம் கேட்டால் சரியான பதில் சொல்லவில்லை என்றனர்.

இதனையடுத்து அதிகாரிகள், முகவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து அவர்களை வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story