திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் திறக்கப்படாத 27 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்


திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் திறக்கப்படாத 27 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்
x
தினத்தந்தி 23 May 2019 11:00 PM GMT (Updated: 23 May 2019 8:27 PM GMT)

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் 27 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் திறக்கப்படவில்லை.

திருச்சி,

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் ஸ்ரீரங்கம், திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவெறும்பூர், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

இந்த 6 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிக வாக்காளர்கள் எண்ணிக்கை உடையது ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியாகும். இந்த தொகுதியில் 335 வாக்குச்சாவடி கள் அமைக்கப்பட்டு இருந்தன.

ஸ்ரீரங்கம் தொகுதியில் உள்ள வாக்குகள் 25 சுற்றுகளாக எண்ணப்பட்டன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணுவதற்காக அமைக்கப்பட்டு இருந்த 15 மேஜைகளிலும் ஊழியர்கள் விறு, விறுப்பாக வாக்குகளை எண்ணியதால் பிற்பகல் 2 மணிக்குள் அனைத்து வாக்குகளும் எண்ணி முடிக்கப்பட்டன. மற்ற சட்டமன்ற தொகுதிகளில் இதைவிட குறைவாகவே சுற்றுகள் இருந்தன. ஆனால் அவற்றை எண்ணும் பணி பிற்பகல் 3 மணிக்கு மேலும் தொடர்ந்தன.

திறக்கப்படாத எந்திரங்கள்

ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் 7 வாக்குச்சாவடிகளின் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை திறக்க முடியவில்லை. காரணம் ஏற்கனவே வாக்குப்பதிவு தினத்தன்று வாக்குப்பதிவு முடிந்ததும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் உள்ள ‘குளோஸ்’ என்ற பட்டனை தேர்தல் பணியில் ஈடுபட்டு இருந்த அலுவலர்கள் அழுத்தி இருக்க வேண்டும். ‘குளோஸ் பட்டனை’ அழுத்தாததால் அதனை திறக்க முடியவில்லை.

இதனையடுத்து திறக்கப்படாத அந்த எந்திரங்கள் வேட்பாளர்களின் ஏஜெண்டுகளிடம் 17(3) படிவத்தில் கையெழுத்து வாங்கி கொண்டு, அவர்களது முன்னிலையில் மீண்டும் ‘குளோஸ் பட்டனை’ அழுத்தினர். பின்னர் அந்த எந்திரங்கள் திறந்து எண்ணப்பட்டன. அதன் பின்னரும் ஒரு சில எந்திரங்கள் திறக்கப்படவில்லை. தொடர்ந்து விவிபேட் கருவியில் பதிவான ஓட்டுகளை எண்ணி முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

புதுக்கோட்டை

இதேபோல் திருச்சி கிழக்கு தொகுதியில் 5 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களையும், திருச்சி மேற்கு தொகுதியில் 3 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களையும், திருவெறும்பூர் தொகுதியில் 3 வாக்குப்பதிவு எந்திரங்களையும், புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 6 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களையும், கந்தவர்கோட்டை தொகுதியில் 3 எந்திரங்களையும் திறக்கமுடியவில்லை. இந்த எந்திரங்களும் மேற்கண்ட விதிமுறைகளின் படி எண்ணப்பட்டன.

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் 27 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் திறக்கப்படாததால் வாக்கு எண்ணும் மையத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story