பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம், கணவருடன் காரில் சென்ற இளம்பெண் கடத்தல் - திருக்கோவிலூர் அருகே பரபரப்பு


பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம், கணவருடன் காரில் சென்ற இளம்பெண் கடத்தல் - திருக்கோவிலூர் அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 23 May 2019 10:30 PM GMT (Updated: 23 May 2019 8:56 PM GMT)

திருக்கோவிலூர் அருகே பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த இளம்பெண் கடத்தப்பட்டார். கணவருடன் காரில் சென்றபோது நடந்த இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

திருக்கோவிலூர், 

சின்னசேலம் அருகே உள்ள கல்லாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் செல்லமுத்து மகன் ராஜசக்தி(வயது 23). இவரும், ஆத்தூர் பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம் தெரிந்ததும் பெண்ணின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையும் மீறி இளம்பெண் கடந்த 4-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறினார். இதனை தொடர்ந்து இருவரும் கடந்த 6-ந் தேதி பாளையம் கூத்தூர் கிராமத்தில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் தேவரடியார் குப்பத்தில் உள்ள ராஜசக்தியின் உறவினர் வீட்டில் தங்கி இருந்தனர்.

இந்த நிலையில் ராஜசக்தி தனது மனைவியுடன் காரில் கல்லாநத்தம் கிராமத்துக்கு புறப்பட்டார். இது பற்றி அறிந்ததும் இளம்பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் 5 கார்களில் அவர்களை தேடி வந்தனர். திருக்கோவிலூர் அருகே மடாம்பூண்டி என்ற இடத்தில் ராஜசக்தி சென்றபோது, இளம்பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அந்த காரை மறித்தனர்.

கார்களில் இருந்து உருட்டுக்கட்டை மற்றும் அரிவாளுடன் இறங்கியவர்கள், ராஜசக்தி வந்த கார் கண்ணாடியை அடித்து நொறுக்கினர். பின்னர் காரின் டயர்களை வெட்டி சேதப்படுத்தினர். பின்னர் அவர்கள், ராஜசக்தியை மிரட்டி அவரது மனைவியை காரில் கடத்திச்சென்றனர்.

இது குறித்து திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்தில் ராஜசக்தி புகார் கொடுத்தார். அதன்பேரில் இளம்பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் 25 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story