தென்காசி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் தனுஷ்குமார் வெற்றி


தென்காசி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் தனுஷ்குமார் வெற்றி
x
தினத்தந்தி 23 May 2019 11:15 PM GMT (Updated: 23 May 2019 10:36 PM GMT)

தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் தனுஷ்குமார் வெற்றி பெற்றார்.

நெல்லை,

நெல்லை மாவட்டம் தென்காசி நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, தி.மு.க. சார்பில் தனுஷ்குமார், அ.ம.மு.க. சார்பில் பொன்னுத்தாய், மக்கள் நீதிமய்யம் சார்பில் முனீஸ்வரன், நாம் தமிழர் கட்சி சார்பில் மதிவாணன் உள்பட 25 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இந்த தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் உள்ள அறையில் வைத்து பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த தொகுதியில் பதிவான வாக்குகள் நேற்று காலையில் எண்ணப்பட்டன. மொத்தம் 14 டேபிள்கள் போடப்பட்டு இருந்தன. நேற்று காலையில் 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குவதாக இருந்தது. ஆனால் சில குளறுபடிகளால் 20 நிமிடங்கள் தாமதமாக அதாவது 8.20 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணும் பணி தேர்தல் அதிகாரியும், மாவட்ட வருவாய் அலுவலருமான முத்துராமலிங்கம் முன்னிலையில் நடந்தது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. பின்னர் வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டன.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே தி.மு.க. வேட்பாளர் தனுஷ்குமார் முன்னிலை பெற்ற வண்ணம் இருந்தார். இந்த தொகுதியில் மொத்தம் 27 சுற்றுகள் எண்ணப்பட்டன. இதன் முடிவில் தி.மு.க. வேட்பாளர் தனுஷ்குமார் 4,76,156 ஓட்டுகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி 3,55,870 வாக்குகளை பெற்றார். இதன்மூலம் தென்காசி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் தனுஷ்குமார் 1,20,286 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இதையடுத்து தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். பின்னர் தனுஷ்குமார் நிருபர்களிடம் கூறுகையில், “தென்காசி தொகுதியின் வெற்றியின் மூலம் மு.க.ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்துவேன். இந்த தொகுதியில் உள்ள மக்களின் கோரிக்கைகள் நிறைவேற பாடுபடுவேன்” என்றார். இதையடுத்து அவர் குற்றாலத்தில் உள்ள அண்ணா சிலைக்கு கட்சி நிர்வாகிகளுடன் ஊர்வலமாக சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் மாவட்ட செயலாளர் சிவபத்மநாபன் மற்றும் பலர் சென்றனர்.

தென்காசி தொகுதியில் வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுகள் விவரம் வருமாறு:-

1) தனுஷ்குமார் (தி.மு.க.)-4,76,156,  2) டாக்டர் கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்)- 3,55,870,  3) பொன்னுத்தாய் (அ.ம.மு.க.)-92,116,  4) மதிவாணன் (நாம் தமிழர் கட்சி)-59,445.  5) முனீஸ்வரன் (மக்கள் நீதி மய்யம்)-24,023,  6) எம்.பொன்னுத்தாய் (சுயே.)-4,733,  7) பெருமாள்சாமி (சுயே.)-4,334,  
8) பரத்ராஜ் (சுயே.)-4,226,  9) பொன்னுச்சாமி (சுயே.)-3,306,  10) சூரியரகுபதி (சுயே.)-3,002,  11) பழனிச்சாமி (சுயே.)-2,950,  12) கோ.பொன்னுத்தாய் (சுயே.)-2,427,  13) செல்வகுமார் (சுயே)-2,230,  14) மூர்த்தி (சுயே.)-1,985,  15) தீபன் அருண் (சுயே.)-1,965,  16) சிவஜெயபிரகாஷ் (சுயே.)-1,947,  17) முத்துமுருகன் (சுயே.)-1,734,  18) சுந்தரம் (சுயே.)-1,490,  19) தாமரை செல்வன் (சுயே.)-1,473,  20) தனுஷ்கோடி (சுயே.)-1,245,  21) எம்.பொன்னுத்தாய் (சுயே.)-1,129,  22) ரவி (ஆன்டிகரெப்சன் டைனமிக் பார்ட்டி)-1,194,  23) வைரவன் (சுயே.)-998,  24) சுப்பையா (சுயே.)-808,  
25) தங்கராஜ் (சுயே.)-727,  26) நோட்டா- 14,056

தேர்தலில் வெற்றி பெற்ற தனுஷ்குமாருக்கு தேர்தல் பார்வையாளர் விஷ்ணுவர்தன், தேர்தல் அதிகாரி முத்துராமலிங்கம் ஆகியோர் சான்றிதழை வழங்கினர். மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


Next Story