தனித்தனி விபத்தில், விவசாயி உள்பட 2 பேர் பலி
திருவெண்ணெய்நல்லூர், வானூர் பகுதியில் நடந்த தனித்தனி விபத்தில் விவசாயி உள்பட 2 பேர் பலியாகினர்.
விழுப்புரம்,
கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா கொரத்தி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 58), விவசாயி. இவர் தனது மோட்டார் சைக்கிளில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பைத்தாம்பாடி கூட்டுசாலையில் சென்றபோது பின்னால் வந்த கார் மோதியதில் ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுதொடர்பாக கார் டிரைவான காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியை சேர்ந்த வினோத்குமார் (44) என்பவர் மீது திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் புதுச்சேரி மாநிலம் அரும்பார்த்தபுரம் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (40). இவர் தனது காரில் திண்டிவனத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் அங்கிருந்து புதுச்சேரிக்கு புறப்பட் டார். வழியில் கடலூர் மாவட்டம் வண்ணாரப்பாளையத்தை சேர்ந்த யோகேஸ்வரன் (35) என்பவர் ‘லிப்ட்’ கேட்டு அந்த காரில் ஏறிக்கொண்டார்.
திண்டிவனம்- புதுச்சேரி சாலையில் வானூர் அடுத்த துருவை என்ற இடத்தில் சென்றபோது பன்னீர்செல்வத்தின் கட்டுப்பாட்டை இழந்த கார் நிலைதடுமாறி சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பன்னீர்செல்வம் சம்பவ இடத்திலேயே இறந்தார். காயமடைந்த யோகேஸ்வரன், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து வானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story