போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர் மர்ம சாவு


போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர் மர்ம சாவு
x
தினத்தந்தி 24 May 2019 10:45 PM GMT (Updated: 24 May 2019 8:08 PM GMT)

கூடுவாஞ்சேரியில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்டவர் மர்ம சாவு அடைந்தார்.

தாம்பரம்,

காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அடிக்கடி வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இதில் ஈடுபடும் குற்றவாளிகளை பிடிப்பதற்காக காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி உத்தரவின் பேரில், வண்டலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வளவன் தலைமையில் கூடுவாஞ்சேரி இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 22-ந்தேதி கூடுவாஞ்சேரி போலீசார் ஆதனூர் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அங்கு சந்தேகப்படும் வகையில் வந்த காரை போலீசார் வழிமறித்து சோதனை செய்யும் போது அந்த காரில் 3 நபர்கள் இருந்தனர். இதனையடுத்து 3 பேரையும் தனிப்படை போலீசார் கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தபோது, அவர்கள் 3 பேரும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் அவர்களிடம் விசாரித்தபோது, அவர்கள் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மேட்டுத்தெருவை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் கார் டிரைவரான நாராயணன் (வயது 32), அதே பகுதியை சேர்ந்த சிங் என்கிற முருகானந்தம் (29), அச்சரப்பாக்கம் பகுதியை சேர்ந்த துரைராஜன் (29), என்பது தெரியவந்தது.

இதனையடுத்து, விசாரணையின் போது, திடீரென நாராயணனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனே போலீசார் அவரை அருகிலுள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர். இதனையடுத்து மீண்டும் நாராயணனை போலீசார் கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

இதன்பின்னர், நாராயணனை செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக போலீசார் வாகனத்தில் அழைத்துச்செல்லும்போது வழியில் அவருக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டு உள்ளது. உடனே அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் நாராயணன் உடலை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனைத்தொடர்ந்து நாராயணன் இறந்த சம்பவத்தை பற்றி அரியலூர் மாவட்டத்தில் உள்ள நாராயணன் குடும்பத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இறந்துபோன நாராயணனுக்கு மனைவி, 3 குழந்தைகள் உள்ளனர். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த வடக்கு மண்டல டி.ஐ.ஜி. தேன்மொழி, காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி ஆகியோர் கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையத்திற்கு நேற்று காலை வந்தனர்.

இதில், நாராயணன் நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்தாரா? அல்லது போலீசாரின் கடுமையான விசாரணையில் இறந்தாரா? என்பது குறித்து தனிப்படை போலீசாரிடம் தேன்மொழி விசாரணை நடத்தினார்.

இதனையடுத்து, போலீஸ் நிலையத்திற்கு செங்கல்பட்டு மாஜிஸ்திரேட்டு நேரில் வந்து போலீசாரிடம் விசாரணை நடத்தினார்.

அப்போது, போலீஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் மாஜிஸ்திரேட்டு ஆய்வு செய்தார்

இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘நாராயணன் பல்வேறு திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளார். ஆதனூரில் ஒரு வீட்டில் டி.வி.யை திருடிக்கொண்டு வரும்போது போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்துள்ளனர்.

அவர் எப்படி இறந்தார் என்பது பிரேத பரிசோதனையின் முடிவில் தெரியவரும் என்று தெரிவித்தார்.

Next Story