மேல்மலையனூர் அருகே, கழுத்தை நெரித்து விவசாயி கொலை - நடத்தையில் சந்தேகப்பட்டதால் மனைவி வெறிச்செயல்


மேல்மலையனூர் அருகே, கழுத்தை நெரித்து விவசாயி கொலை - நடத்தையில் சந்தேகப்பட்டதால் மனைவி வெறிச்செயல்
x
தினத்தந்தி 24 May 2019 10:45 PM GMT (Updated: 25 May 2019 12:13 AM GMT)

மேல்மலையனூர் அருகே நடத்தையில் சந்தேகப்பட்டதால் விவசாயியை கழுத்தை நெரித்து கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

மேல்மலையனூர்,

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே உள்ள மேல் வயலாமூரை சேர்ந்தவர் காசி மகன் குணசேகரன்(வயது 45), விவசாயி. இவருக்கு காந்திமதி(38) என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். காந்திமதி அதேஊரை சேர்ந்த 30 வயது வாலிபர் ஒருவருடன் கள்ளத்தொடர்பில் உள்ளதாக குணசேகரனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக கடந்த 16-ந்தேதி கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் காந்திமதி கணவரிடம் கோபித்துக் கொண்டு தனது குழந்தைகளுடன் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த கோணாமங்கலத்தில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதையறிந்த குணசேகரனின் அண்ணன் சேட்டு காந்திமதியை சந்தித்து சமாதானம் செய்து கணவருடன் சேர்ந்து வாழுமாறு அறிவுரை கூறி கடந்த 20-ந்தேதி மேல்வயலாமூருக்கு அழைத்து வந்தார்.

இந்த நிலையில் குணசேகரன் நேற்று காலை வீட்டில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். காந்திமதி வீட்டில் இல்லை. இதுபற்றி தகவல் அறிந்ததும் அவலூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுபா, சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குணசேகரனின் உடலை பார்வையிட்டனர். அப்போது அவர் கொலை செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. இதற்கிடையே குணசேகரனின் உடல் பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தினரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் காந்திமதி மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார், காந்திமதியை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அந்த வாலிபருடன் பேசிக் கொண்டிருந்ததை கண்டித்ததாலும், தொடர்ந்து தனது நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறில் ஈடுபட்டு வந்ததாலும் குணசேகரனை, அவர் கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது.

இது குறித்து சேட்டு கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காந்திமதியை கைது செய்தனர். மேலும் இந்த கொலை சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மேல்மலையனூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story