அரக்கோணத்தில் தந்தை, மகன் உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு


அரக்கோணத்தில் தந்தை, மகன் உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 25 May 2019 10:30 PM GMT (Updated: 25 May 2019 8:04 PM GMT)

அரக்கோணத்தில் தந்தை, மகன் உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. அதில் சம்பந்தப்பட்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

அரக்கோணம், 

இது குறித்து போலீஸ்தரப்பில் கூறியதாவது:-

அரக்கோணம் அருகே உள்ள சித்தேரி பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 28). இவர், சென்னை அருகே உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று இரவு 7 மணியளவில் அரக்கோணம் புதிய பஸ் நிலையம் அருகே ரெயில்வே யார்டுக்கு செல்லும் பாதையில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் திடீரென அரிவாளால் ராஜேசை வெட்டினர். அதில் அவரது இரு கைகளிலும் வெட்டு விழுந்தது. காயமடைந்த ராஜேசை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அரக்கோணம் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம், சப்-இன்ஸ்பெக்டர் மஞ்சுநாத் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல் அரக்கோணம் எஸ்.ஆர்.கேட் முத்தப்பன் தெருவை சேர்ந்தவர் காலேசா (50), வியாபாரி. இவரது மகன் மெகராஜ் (28). இவர்கள் எஸ்.ஆர்.கேட் பகுதியில் காய்கறி கடை வைத்துள்ளனர். நேற்று இரவு 8.30 மணியளவில் 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளுடன் வந்து மெகராஜை வெட்டினர். அவர்களை தடுக்க வந்த தந்தை காலேசாவையும் அவர்கள் வெட்டி விட்டு தப்பி சென்றனர்.

அதில் காயம் அடைந்த தந்தை, மகனை மீட்டு அப்பகுதி மக்கள் சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி பெற்ற மெகராஜ் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தகவல் அறிந்ததும் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் மெகராஜின் உறவினர்களும், நண்பர்களும் குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து அரக்கோணம் போலீசில் புகார் செய்யப்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம், சப்-இன்ஸ்பெக்டர் மஞ்சுநாத், தாசில்தார் ஜெயக்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய 4 பேர் கொண்ட கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story