ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை வழக்கு: நர்சு தம்பிக்கு 6-ந் தேதி வரை நீதிமன்ற காவல்


ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை வழக்கு: நர்சு தம்பிக்கு 6-ந் தேதி வரை நீதிமன்ற காவல்
x
தினத்தந்தி 26 May 2019 11:15 PM GMT (Updated: 26 May 2019 5:31 PM GMT)

ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை வழக்கில் நர்சு அமுதவள்ளியின் தம்பி நந்தகுமாரின் போலீஸ் காவல் நேற்றுடன் முடிவடைந்ததை தொடர்ந்து, அவரை வருகிற 6-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு வடிவேல் உத்தரவிட்டார்.

நாமக்கல், 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக விருப்ப ஓய்வுபெற்ற செவிலியர் உதவியாளர் (நர்சு) அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன், பெங்களூருவை சேர்ந்த அழகுகலை நிபுணர் ரேகா உள்பட இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டு, சேலம் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தேடி வந்த அமுதவள்ளியின் தம்பி நந்தகுமார் (வயது 39) கடந்த 16-ந் தேதி திருச்சி கோர்ட்டில் சரண் அடைந்தார். பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட அவரை 10 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டு சி.பி.சி.ஐ.டி. போலீசார் நாமக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கருணாநிதி, நந்தகுமாரை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு அனுமதி அளித்தார். இதை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் அவரை ரகசிய இடத்தில் வைத்து குழந்தைகள் விற்பனை தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். அவரது போலீஸ் காவல் நேற்றுடன் முடிவடைந்தது.

இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று அவரை நாமக்கல் முதலாவது குற்றவியல் மாஜிஸ்திரேட்டு வடிவேல் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அப்போது நந்தகுமாரை வருகிற 6-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு வடிவேல் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து நந்தகுமார் சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story