திருவள்ளூர் அருகே ரெயில்வே ஊழியர் அடித்துக்கொலை?


திருவள்ளூர் அருகே ரெயில்வே ஊழியர் அடித்துக்கொலை?
x
தினத்தந்தி 26 May 2019 10:15 PM GMT (Updated: 26 May 2019 6:44 PM GMT)

திருவள்ளூர் அருகே ரெயில்வே ஊழியர் அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் அருகே உள்ள ராமன்கோவில் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன் (வயது 40). ரெயில்வே ஊழியரான இவருக்கு மகாலட்சுமி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக மகாலட்சுமி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சந்திரனை விட்டு பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று காலை வீட்டின் அருகே உள்ள பானம்பாக்கம் ரெயில் நிலையம் அருகே உள்ள முட்புதரில் சந்திரன் பிணமாக கிடந்தார். இதை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் கடம்பத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த ரெயில்வே ஊழியர் சந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே சந்திரனின் தாயார் சரோஜா, தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக கடம்பத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சந்திரனை யாரேனும் அடித்து கொலை செய்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story