சீகன்பால்கு 300-வது ஆண்டு நினைவாக பைபிள் எழுதும் சாதனை திருவிழா 1,464 பேர் பங்கேற்பு


சீகன்பால்கு 300-வது ஆண்டு நினைவாக பைபிள் எழுதும் சாதனை திருவிழா 1,464 பேர் பங்கேற்பு
x
தினத்தந்தி 26 May 2019 10:45 PM GMT (Updated: 26 May 2019 7:06 PM GMT)

சீகன்பால்கு 300-வது ஆண்டு நினைவாக தரங்கம்பாடியில் பைபிள் எழுதும் சாதனை திருவிழா நடைபெற்றது. இதில் 1,464 பேர் பங்கேற்றனர்.

பொறையாறு,

நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழில் அச்சு எந்திரம் உருவாக்கி காகிதம் மற்றும் மை தயார் செய்து புனித நூலான பைபிளின் புதிய ஏற்பாட்டை தரங்கம்பாடியில் தமிழில் அச்சிட்டு வெளியிட்ட பார்த்தலேமியு சீகன்பால்கு 300-வது ஆண்டு நினைவாக அவர் வாழ்ந்த வீட்டின் அருகே வேதாகமத் திருவிழாவின் 2-வது நாள் பைபிள் எழுதும் சாதனை திருவிழா நடைபெற்றது.

இதில் 1,464 பேர் கலந்து கொண்டு புனித பைபிள் நூலை தமிழில் எழுதினர். விழாவிற்கு தமிழ் லுத்தரன் திருச்சபையின் முன்னாள் பேராயர் எட்வின் ஜெயகுமார் தலைமை தாங்கினார். சீகன்பால்கு அருங்காட்சியக இயக்குனர் ஜெர்மனி நாட்டை சேர்்ந்த ஜாஸ்மின் எபர்ட், புதிய எருசலேம் ஆலய ஆயர் நவராஜ் ஆபிரகாம், பிஷப் ஜான்சன், பள்ளி தலைமை ஆசிரியர் ஜான்சைமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புனித தெரசாள் மகளிர் கல்லூரி தாளாளர் கருணா ஜோசப்பாத் வரவேற்று பேசினார்.

சென்னை வேதாகம நண்பன் குழு இயக்குனர் வீராசாமிதாஸ் கையெழுத்து வேதாகம சாதனை நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். முன்னதாக புனித நூல் பைபிளின் புதிய ஏற்பாடு, பழைய ஏற்பாடு ஆகிய இரண்டும் கிறிஸ்தவர்கள் முன்னிலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இரண்டு நாள் நடைபெற்ற விழாவில் 1,464 பேர் கலந்து கொண்டு பைபிள் நூலை தமிழில் எழுதினர்.

தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழும், பரிசும் வழங்கப்பட்டது. விழாவில் நாகை, திருவாரூர், காரைக்கால், கடலூர், தஞ்சாவூர், விழுப்புரம், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்ட பகுதிகளை சேர்ந்த சபைகுருக்கள், பேராசிரியர்கள் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story