குவைத்தில் இருந்து சென்னை வந்தபோது விமானத்தில் சிகரெட் பிடித்த வாலிபர் கைது


குவைத்தில் இருந்து சென்னை வந்தபோது விமானத்தில் சிகரெட் பிடித்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 26 May 2019 10:30 PM GMT (Updated: 26 May 2019 7:32 PM GMT)

குவைத்தில் இருந்து சென்னை வந்த விமானத்தில் சிகரெட் பிடித்ததுடன், அதை கண்டித்த பணிப்பெண்களுடன் ரகளை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு குவைத்தில் இருந்து தனியார் பயணிகள் விமானம் வந்தது. அதில் தஞ்சாவூரை சேர்ந்த இஸ்மாயில் (வயது 33) என்பவர் வந்தார்.

விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது இஸ்மாயில், விமான பாதுகாப்பு சட்டத்துக்கு எதிராக விமானத்தின் உள்ளேயே சிகரெட் பிடித்ததுடன், புகையை அருகில் இருந்த சக பயணியின் முகத்தில் ஊதியதாக கூறப்படுகிறது.

இதை கண்ட விமான பணிப்பெண்கள், இஸ்மாயிலை கண்டித்தனர். அவர் புகைப்பிடிப்பதையும் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரம் அடைந்த இஸ்மாயில், விமான பணிப்பெண்களிடம் ரகளையில் ஈடுபட்டார். அவர்களை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறப்படுகிறது.

அந்த விமானம் சென்னையில் தரை இறங்கியதும் விமான பாதுகாப்பு அதிகாரிகள் இஸ்மாயிலை பிடித்து விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து இஸ்மாயிலை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story