ஜெயங்கொண்டத்தில் காணாமல்போன சகோதரிகளை கண்டுபிடித்து தரக்கோரி உறவினர்கள் சாலை மறியல்


ஜெயங்கொண்டத்தில் காணாமல்போன சகோதரிகளை கண்டுபிடித்து தரக்கோரி உறவினர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 26 May 2019 11:00 PM GMT (Updated: 26 May 2019 7:53 PM GMT)

ஜெயங்கொண்டத்தில் காணாமல்போன சகோதரிகளை கண்டுபிடித்து தரக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள பெரியவளையம் கிராமத்தை சேர்ந்தவர் அறிவழகன்(வயது 50). விவசாயியான இவரது மனைவி லட்சுமி(48). இவர்களுக்கு பிரகாஷ்(20) என்ற மகனும், 23 மற்றும் 16 வயதில் 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் குடும்பத்தில் சகோதர, சகோதரிகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கோபித்துக்கொண்ட சகோதரிகள் இருவரும் கடந்த 23-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்களது பெற்றோர், உறவினர்கள், தோழிகள் மற்றும் அக்கம் பக்கத்தினர் வீடுகளில் தேடிப்பார்த்தனர். ஆனால் அவர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

பின்னர் இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் சகோதரர் பிரகாஷ் புகார் அளித்தார். புகாரின் பேரில் மாயமான சகோதரிகளை போலீசார் தேடி வந்தனர். மேலும் உண்மையிலேயே அவர்கள் இருவரும் காணாமல் போய் விட்டனரா? அல்லது வேறு எவரேனும் கடத்தி இருப்பார்களா? என பல்வேறு கோணங்களில் போலீ சார் விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில் காணாமல் போன சகோதரிகளை கண்டுபிடித்து தரக்கோரி அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று ஜெயங்கொண்டம் 4 ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் தலைமையிலான போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஸ்ரீதர், வசந்த், வெங்கடேஷ்பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில் போலீசார் கூறுகையில், காணாமல் போன சகோதரிகள் 2 பேரையும் தீவிரமாக தேடி வருகிறோம். விரைவில் அவர்களை கண்டுப்பிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்துவிடுவோம் என்று உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட உறவினர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் ஜெயங்கொண்டம் 4 ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story