பழனி அருகே நீரில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி ‘செல்பி’ எடுத்தபோது தவறி விழுந்த பரிதாபம்
பழனி அருகே ஓடை பகுதியில் ‘செல்பி’ எடுத்தபோது தவறி விழுந்த கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி பலியானார்.
பழனி,
பழனி அடிவாரம் தில்லையாடி வள்ளியம்மை தெரு பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மகன் யாதவகுமார் (வயது 17). இவர் பழனி பகுதியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் 2–ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று இவர் தனது நண்பர்களுடன் கொடைக்கானல் சாலையில் புளியமரத்துசெட் பகுதியில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிட சென்றுள்ளார்.
பின்னர் அவர்கள் அந்த பகுதியில் உள்ள ஓடையில் குளிக்க சென்றுள்ளனர். அங்கு யாதவகுமார் கரையோரத்தில் நின்று தனது செல்போனில் ‘செல்பி’ எடுத்ததாக தெரிகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக அவர் தவறி ஓடையில் விழுந்தார். இதைக்கண்ட அவரது நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் அவர் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பழனி தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் விசாரணையில் அவர் ‘செல்பி’ எடுத்தபோது ஓடையில் தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது.
பின்னர் யாதவகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.