நாகர்கோவிலில் துணிகரம்: பெண்ணிடம் 6½ பவுன் நகை பறிப்பு முகவரி கேட்பது போல் நடித்து மர்ம நபர்கள் கைவரிசை


நாகர்கோவிலில் துணிகரம்: பெண்ணிடம் 6½ பவுன் நகை பறிப்பு முகவரி கேட்பது போல் நடித்து மர்ம நபர்கள் கைவரிசை
x
தினத்தந்தி 27 May 2019 10:15 PM GMT (Updated: 27 May 2019 3:10 PM GMT)

நாகர்கோவிலில் பட்டப்பகலில் முகவரி கேட்பது போல் நடித்து பெண்ணிடம் 6½ பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் கோட்டார் வேதநகரை சேர்ந்தவர் மேரி மார்டின்னம்மாள் (வயது 68). இவர் நேற்று காலை கடையில் பொருட்கள் வாங்குவதற்காக புறப்பட்டார். வீட்டில் இருந்து சிறிது தூரம் நடந்து சென்று கொண்டிருந்த போது ஒரு மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் வந்தனர். பின்னர் 2 பேரும் மேரி மார்டின்னம்மாள் அருகே சென்று ஏதோ முகவரி கேட்டுள்ளனர். அவரும் முகவரியை தெரிவித்து இருக்கிறார். அந்த சமயத்தில் மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த மர்ம நபர் திடீரென மேரி மார்டின்னம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 6½ பவுன் நகையை பறித்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு மர்ம நபர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் நகையை பறித்துக்கொண்டு மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர். பின்னர் இதுபற்றி கோட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு தகவல் தெரிவித்து சந்தேகப்படும்படியாக யாரேனும் மோட்டார் சைக்கிளில் சென்றால் உடனே பிடிக்குமாறு அறிவுறுத்தினர். எனினும் மர்ம நபர்கள் போலீசாரிடம் சிக்கவில்லை. இதனையடுத்து சம்பவம் நடந்த இடத்தில் ஏதேனும் கண்காணிப்பு கேமரா இருக்கிறதா? என்று போலீசார் ஆய்வு செய்தனர்.

மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள். நாகர்கோவிலில் பட்டப்பகலில் முகவரி கேட்பது போல் நடித்து பெண்ணிடம் மர்ம நபர்கள் நகை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story