மலேசியா, சார்ஜாவில் இருந்து கடத்தல் சென்னை விமான நிலையத்தில் ரூ.50 லட்சம் தங்கம் பறிமுதல்


மலேசியா, சார்ஜாவில் இருந்து கடத்தல் சென்னை விமான நிலையத்தில் ரூ.50 லட்சம் தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 27 May 2019 10:30 PM GMT (Updated: 27 May 2019 4:08 PM GMT)

சென்னை விமான நிலையத்தில் மலேசியா, சார்ஜாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் அதிகளவில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள், விமான நிலையத்தில் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

அப்போது சார்ஜாவில் இருந்து திருவனந்தபுரம் வழியாக சென்னைக்கு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகள் அனைவரும் கீழே இறங்கி சென்ற பிறகு, சுங்க இலாகா அதிகாரிகள் அந்த விமானத்தில் ஏறி சோதனை செய்தனர்.

அதில் விமானத்தில் ஒரு இருக்கைக்கு அடியில் ஒரு சிறிய பார்சல் கேட்பாரற்று கிடந்தது. அவற்றை பிரித்து பார்த்துபோது 4 தங்க சங்கிலிகளும், 8 வளையல்களும் இருந்தன. ரூ.41 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 250 கிராம் எடைக்கொண்ட தங்கத்தை சுங்க இலாகா அகதிாரிகள் பறிமுதல் செய்தனர்.

அந்த இருக்கையில் அமர்ந்து வந்தது யார்? என்று விசாரித்தபோது தஞ்சாவூரை சேர்ந்த பஷீர் அகமது(வயது 56) என்பதும், அவர் தனது உடைமைகளை எடுப்பதற்காக காத்திருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து பஷீர் அகமதை பிடித்து விசாரித்தபோது, அவர் அந்த தங்க நகைகளை சார்ஜாவில் இருந்து கடத்தி வந்து இருக்கைக்கு அடியில் மறைத்து வைத்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து பஷீர் அகமதை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதேபோல் மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் வழியாக சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த அப்துல் பக்கீர்(25) என்பவர் மீது சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர்.

அதில் அவர், உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.9 லட்சம் மதிப்புள்ள 267 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள். மேலும் அவர், அந்த தங்கத்தை யாருக்காக மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்தார்? என சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story