புதுக்கோட்டை மாவட்ட அம்மன் கோவில்களில் தேரோட்டம் திரளான பக்தர்கள் பங்கேற்பு


புதுக்கோட்டை மாவட்ட அம்மன் கோவில்களில் தேரோட்டம் திரளான பக்தர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 27 May 2019 10:30 PM GMT (Updated: 27 May 2019 8:17 PM GMT)

புதுக்கோட்டை மாவட்ட அம்மன் கோவில்களில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அன்னவாசல்,

புதுக்கோட்டை மாவட்டம், காரையூரில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி அம்மனுக்கு தினமும் பூஜைகள் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் பொங்கல் வைத்து வழிபாடு நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். பின்னர் தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

இலுப்பூர் அருகே உள்ள நாங்குப்பட்டியில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி நேற்று தேரோட்டம் நடந்தது. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் முத்துமாரியம்மனை தேரில் எழுந்தருள செய்தனர். இதையடுத்து மேள, தாளம் முழங்க, வாணவேடிக்கையுடன் தேரோட்டம் நடைபெற்றது. பின்னர் முத்துமாரியம்மனுக்கு சிறப்பு ஆராதனை நடந்தது.

கொத்தமங்கலம்

இதேபோல கொத்தமங்கலம், குளமங்கலம் வடக்கு, நெய்வத்தளி கிராமங்களில் உள்ள அம்மன் கோவில்களிலும் தேரோட்டம் நடந்தது.

கொத்தமங்கலத்தில் ஒரே நேரத்தில் 3 தேர்கள் ஒன்றன் பின் ஒன்றாக பக்தர்கள் இழுத்துச் சென்றனர். அதாவது பேச்சியம்மன் தேரை பெண்களும், வாழவந்த பிள்ளையார் தேரை சிறுவர்களும், முத்துமாரியம்மன் வீற்றிருந்த தேரை ஆண்களும் இழுத்தனர்.


Next Story