சின்னசேலம் அருகே, மின்சாரம் தாக்கி வியாபாரி பலி


சின்னசேலம் அருகே, மின்சாரம் தாக்கி வியாபாரி பலி
x
தினத்தந்தி 27 May 2019 10:15 PM GMT (Updated: 27 May 2019 11:04 PM GMT)

சின்னசேலம் அருகே மின்சாரம் தாக்கியதில், வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார்.

சின்னசேலம், 

சின்னசேலம் அருகே உள்ள நமச்சிவாயபுரத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 43), இளநீர் வியாபாரி. இவரது மனைவி தேன்மொழி(40). நேற்று வேல்முருகன் தேங்காய் பறிப்பதற்காக அதே பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவருக்கு சொந்தமான விளை நிலத்தில் இருந்த தென்னை மரத்தில் ஏறினார்.

அப்போது அவர் மேலே ஏறுவதற்கு இடையூறாக இருந்த ஓலையை வெட்டியதாக தெரிகிறது. இதில் அந்த ஓலை தென்னை மரத்தில் அருகில் சென்ற மின்ஒயரில் உரசியது. அப்போது மின்சாரம் தாக்கியதில் வேல்முருகன் தென்னை மரத்தில் இருந்து கீழே விழுந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிவக்குமார் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வேல்முருகனை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே வேல்முருகன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தேன்மொழி சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதாகர், சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story