கடலூர் ஒன்றிய அலுவலகத்தில், விவசாய தொழிலாளர்கள் தர்ணா - தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட பணிகளை தொடங்க வலியுறுத்தல்


கடலூர் ஒன்றிய அலுவலகத்தில், விவசாய தொழிலாளர்கள் தர்ணா - தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட பணிகளை தொடங்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 27 May 2019 11:04 PM GMT (Updated: 27 May 2019 11:04 PM GMT)

தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட பணிகளை உடனே தொடங்க வலியுறுத்தி கடலூர் ஒன்றிய அலுவலகத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் தர்ணா போராட்டம் நடத்தினர்.

கடலூர், 

விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்ட நாடாளுமன்ற தேர்தல் தினத்தன்று தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பயனாளிகளுக்கு அன்றைய தின சம்பளமான ரூ.229-யை அவரவர் வங்கிக்கணக்கில் செலுத்த வேண்டும். கடலூர் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட பணிகளை உடனே தொடங்க வேண்டும்.

தேசிய ஊரக வேலை நாட்களை 150 நாட்களாக உயர்த்திட வேண்டும். நிலுவையில் உள்ள சம்பள பாக்கியை வழங்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கடலூர் ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர்.

அதன்படி நேற்று ஒன்றிய தலைவர் வைத்திலிங்கம் தலைமையில் மாவட்ட செயலாளர் பிரகாஷ், ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய பொருளாளர் தமிழரசன், துணை தலைவர் கோதண்டபாணி உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் கடலூர் ஒன்றிய அலுவலகத்தில் ஒன்று திரண்டனர்.

பின்னர் அவர்கள் அனைவரும் கடலூர் ஒன்றிய அலுவலக வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட பயனாளிகளுக்கு உடனே வேலை வழங்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியன் நேரில் வந்து விவசாய தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அவரிடம் தொழிலாளர்கள் மனுக்களை அளித்தனர். மனுக்களை பெற்ற அவர் நாளை மறுநாள் (வியாழக் கிழமை) முதல் அனைவருக்கும் வேலை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

இதையடுத்து விவசாய தொழிலாளர் சங்கத்தினர் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இருப்பினும் இந்த போராட்டத்தால் ஒன்றிய அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story