தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - உடற்கல்வி ஆசிரியர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது


தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - உடற்கல்வி ஆசிரியர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 28 May 2019 10:30 PM GMT (Updated: 28 May 2019 11:01 PM GMT)

புதுவையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த உடற்கல்வி ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.

புதுச்சேரி,

புதுச்சேரி நைனார்மண்டபத்தில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்தவர் நிக்கோலஸ்(வயது 31). இவர் அந்த பள்ளியில் படிக்கும் மாணவிகள் சிலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவிகள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்தனர்.

அதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்து இதுபற்றி பள்ளி நிர்வாகத்திடமும், குழந்தைகள் நலக்குழுவிடமும் புகார் செய்தனர். அதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் குழந்தைகள் நலக்குழு தலைவர் ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் விசாரணை நடத்தினர். அப்போது ஆசிரியர் நிக்கோலஸ் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து, ஆபாசமாக பேசியது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து குழந்தைகள் நலக்குழு அதுகுறித்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வகுப்தாவிடம் புகார் மனு அளித்தது. மனுவை பெற்றுக்கொண்ட அவர், அந்த புகார்மீது உரிய நடவடிக்கை எடுக்க முதலியார்பேட்டை போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையிலும் மாணவிகளுக்கு உடற்கல்வி ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.

விசாரணையை தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் உடற்கல்வி ஆசிரியர் நிக்கோலஸ் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story