ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு: வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி கிராமமக்கள் போராட்டம்


ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு: வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி கிராமமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 29 May 2019 11:00 PM GMT (Updated: 29 May 2019 5:03 PM GMT)

வேளாங்கண்ணி அருகே ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேளாங்கண்ணி,

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை செயல்படுத்தும் மத்திய அரசை கண்டித்தும், நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே காமேஸ்வரத்தில் தமிழ்நாடு முக்குலத்துப்புலிகள் அமைப்பின் சார்பில் நேற்று கிராமமக்கள் தங்களது வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாநில நிறுவன தலைவர் ஆறு.சரவணன் தலைமை தாங்கினார். நாகை மாவட்ட செயலாளர் லெனின், வேதாரண்யம் நகர செயலாளர் கிஷோர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இதில் டெல்டா மாவட்டங்களில் 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் துறை வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி. நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளதை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. அதைத்தொடர்ந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் சின்னம் பொறிக்கப்பட்ட காகிதத்தை தீயிட்டு கொளுத்தினர். போராட்டத்தில் கீழையூர் ஒன்றிய செயலாளர் செந்தில்நாதன், துணை செயலாளர் அன்பு, காமேஸ்வரம் கிளை செயலாளர் கார்த்திகேயன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story