கள்ளக்குறிச்சியில், மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல் வாலிபர் பலி - 3 பேர் படுகாயம்


கள்ளக்குறிச்சியில், மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல் வாலிபர் பலி - 3 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 30 May 2019 9:45 PM GMT (Updated: 31 May 2019 12:15 AM GMT)

கள்ளக்குறிச்சியில் மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி அருகே உள்ள உலகங்காத்தான் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மனைவி அஞ்சலை. இவர்களுடைய மகன் சூர்யா (வயது 22). இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் கள்ளக்குறிச்சி- துருகம் சாலையில் கள்ளக்குறிச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

கள்ளக்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகே சென்ற போது, பின்னால் சேலத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பஸ் ஒன்று சூர்யா ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு, சாலையோரமாக நின்று கொண்டிருந்த சரக்கு வாகனத்தின் மீது மோதி நின்றது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த சூர்யா சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் சரக்கு வாகனத்தில் இருந்த கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டையை சேர்ந்த லட்சுமி(48), ஜெயராமன்(65), விஜயலட்சுமி(58) ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதற்கிடையே விபத்து பற்றி அறிந்த கள்ளக்குறிச்சி போலீசார் விரைந்து சென்று, பலியான சூர்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அஞ்சலை, கள்ளக் குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story