விழுப்புரம் அருகே, 4 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி


விழுப்புரம் அருகே, 4 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி
x
தினத்தந்தி 31 May 2019 9:45 PM GMT (Updated: 31 May 2019 5:21 PM GMT)

விழுப்புரம் அருகே 4 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடந்துள்ளது.

விழுப்புரம், 

விழுப்புரம் அருகே முண்டியம்பாக்கத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 51). இவர் அங்குள்ள திரு.வி.க. வீதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.

இந்நிலையில் நள்ளிரவில் மர்ம நபர்கள் இவருடைய கடையின் ஷட்டர் கதவு பூட்டை உடைக்க முயன்றனர். அதே நேரத்தில் இந்த கடைக்கு அருகில் இருந்த ஷேக்அப்துல்லாவின்(31) மருந்து கடை, இளங்கோவனின் (54) பெட்டிக்கடை, ரபீக் (39) என்பவருடைய பேன்சி ஸ்டோர் ஆகிய 3 கடைகளின் பூட்டையும் உடைக்க முயன்றனர்.

அந்த சமயத்தில் அப்பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் இருந்ததால் மர்ம நபர்கள், கடைகளுக்குள் புகுந்து கொள்ளையடிக்காமல் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இதனால் 4 கடைகளிலும் இருந்த பணம் மற்றும் பொருட்கள் கொள்ளை போகாமல் அதிர்ஷ்டவசமாக தப்பியது.

இது குறித்து தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story