சேலத்தில் மாணவியை கடத்தி பலாத்காரம்: போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது


சேலத்தில் மாணவியை கடத்தி பலாத்காரம்: போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
x
தினத்தந்தி 31 May 2019 11:00 PM GMT (Updated: 31 May 2019 7:02 PM GMT)

சேலத்தில் மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

கருப்பூர், 

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

சேலம் மாவட்டம் வெள்ளாளப்பட்டி புதுக்காலனி பகுதியை சேர்ந்தவர் மாது. இவரது மகன் நவீன்குமார் (வயது 22). கூலித்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். பின்னர் நடந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் கூறினால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

மகளை பலாத்காரம் செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவியின் பெற்றோர் சேலம் போலீஸ் கமி‌‌ஷனர் சங்கரிடம் நேற்று முன்தினம் புகார் கொடுத்தனர். அதன்பேரில் நடவடிக்கை எடுக்கக்கோரி கருப்பூர் போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார்.

இதையொட்டி கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நவீன்குமாரை தேடி வந்தனர். போலீசார் தேடுவதை அறிந்த நவீன்குமார் தலைமறைவானார். இந்த நிலையில் கருப்பூர் பகுதியில் உள்ள உறவினர் ஒருவர் வீட்டில் நவீன்குமார் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிந்தது.

இதையொட்டி போலீசார் நேற்று அதிகாலை அங்கு சென்று நவீன்குமாரை பிடித்து போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story