கார்பைடு கல் வைத்து மாம்பழங்கள் பழுக்க வைக்கப்படுகிறதா? பெரிய மார்க்கெட்டில் அதிகாரிகள் திடீர் சோதனை


கார்பைடு கல் வைத்து மாம்பழங்கள் பழுக்க வைக்கப்படுகிறதா? பெரிய மார்க்கெட்டில் அதிகாரிகள் திடீர் சோதனை
x
தினத்தந்தி 31 May 2019 10:15 PM GMT (Updated: 31 May 2019 8:14 PM GMT)

கார்பைடு கல் வைத்து மாம்பழங்கள் பழுக்க வைக்கப்படுகிறதா? என்பது குறித்து புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள்.

புதுச்சேரி,

பெரும்பாலான பழங்கள் கார்பைடு கற்கள் மூலம் பழுக்க வைக்கப்படுவதாக உணவுப்பொருள் பாதுகாப்பு பிரிவுக்கு புகார்கள் வந்தன. தற்போது மாம்பழ சீசன் தொடங்கியுள்ள நிலையில் புதுவை பெரிய மார்க்கெட் பகுதியில் மாம்பழங்கள் கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்படுகிறதா? என்பதை கண்டறிய நேற்று திடீர் சோதனை நடைபெற்றது.

அதிகாரி தன்ராஜ் தலைமையில் இந்த சோதனை நடத்தப்பட்டது. கடந்த காலங்களில் இதுபோன்ற சோதனைகள் நடந்து தொடர்ச்சியான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாததால் மத்திய தணிக்கைத்துறை அதிகாரிகளான ‌ஷந்தன்சிங், இளங்கோவன் ஆகியோரும் இந்த ஆய்வில் கலந்துகொண்டனர். அவர்கள் அனைவரும் ஒவ்வொரு கடையாக சென்று ஆய்வு நடத்தினார்கள்.

அப்போது சில கடைகளில் சந்தேகத்திற்கு இடமாக மாம்பழங்கள் இருந்தன. அந்த மாம்பழங்கள் கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து அவற்றில் சில மாம்பழங்களை ஆய்வுக்கும் அதிகாரிகள் எடுத்து சென்றனர். சுமார் 13 கடைகளில் இதுபோன்று அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். ஆனால் கார்பைடு வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழம் ஏதும் சிக்கவில்லை.

அவ்வாறு கார்பைடு கல் வைத்து மாம்பழங்களை பழுக்க வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கடைக்காரர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். தொடர்ந்து இதேபோல் சோதனை நடத்தவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.


Next Story