தொடர் மழையால் பசுமைக்கு மாறிய தாளவாடி மலைப்பகுதி; யானைகள் தண்ணீர் குடிக்க குட்டைக்கு கூட்டமாக வருகின்றன


தொடர் மழையால் பசுமைக்கு மாறிய தாளவாடி மலைப்பகுதி; யானைகள் தண்ணீர் குடிக்க குட்டைக்கு கூட்டமாக வருகின்றன
x
தினத்தந்தி 1 Jun 2019 10:15 PM GMT (Updated: 1 Jun 2019 6:21 PM GMT)

தொடர்மழையால் தாளவாடி மலைப்பகுதி பசுமைக்கு மாறியுள்ளது. யானைகள் தண்ணீர் குடிக்க கூட்டம் கூட்டமாக குட்டைக்கு வருகின்றன.

தாளவாடி,

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதி கடல் மட்டத்தில் இருந்து 3 ஆயிரம் அடி உயரத்தில் உள்ளது. இதனால் ஊட்டி, கொடைக்கானல் போன்ற குளிர்ந்த தட்வெட்ப நிலை இருக்கும். இதன் காரணமாக தாளவாடி மலைப்பகுதி விவசாயிகள் மலைக்கு ஏற்ற காய்கறி பயிர்களை சாகுபடி செய்து வருகிறார்கள்.

இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக இங்கு மழை பெய்யவில்லை. இதனால் தாளவாடி, ஆசனூர், தலமலை, கேர்மாளம் ஆகிய பகுதிகளில் கடும் வறட்சி நிலவியது. வனக்குட்டைகள் வறண்டுவிட்டன. செடி, கொடிகள் காய்ந்து விட்டன. மரங்கள் பட்டுப்போய் காணப்படுகின்றன.

வனவிலங்குகள் தண்ணீர் குடிக்க வழியில்லாமல் தவித்தன. தண்ணீர் தேடி வனத்தை ஒட்டியுள்ள கிராமங்களுக்கு சென்று பயிர்களையும் நாசம் செய்து வந்தன.

இந்தநிலையில் கடந்த 15 நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் தாளவாடி வனப்பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் வனப்பகுதியில் உள்ள செடி, கொடிகள் மீண்டும் துளிர்விட்டுள்ளன. யானை, மான் போன்ற விலங்குகளின் தீவன பிரச்சினையும் தீர்ந்துள்ளது.

தொடர்ந்து 2 வாரங்களாக மழை பெய்ததால் தாளவாடி, தலமலை வனப்பகுதியில் உள்ள குட்டைகளில் ஓரளவு நீர் நிரம்பியுள்ளன.. இதனால் யானைகள் கூட்டமாக குட்டைக்கு வந்து தண்ணீர் குடித்து தாகம் தணிக்கின்றன. மேலும் குளித்து கும்மாளமிடுகின்றன.

இதேபோல் புலி, சிறுத்தை, காட்டெருமை, மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகளும் வனக்குட்டைகளில் தண்ணீர் குடித்து செல்கின்றன. கோடை வெயிலால் காய்ந்து, வறண்டு கிடந்த தாளவாடி மலைப்பகுதி மீண்டும் பசுமைக்கு மாறி உள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது.


Next Story