திருச்சியில் ரத்தான ரெயிலுக்கு டிக்கெட் வினியோகித்த ஊழியர்கள் அதிகாரி அலுவலகத்தை பயணிகள் முற்றுகை


திருச்சியில் ரத்தான ரெயிலுக்கு டிக்கெட் வினியோகித்த ஊழியர்கள் அதிகாரி அலுவலகத்தை பயணிகள் முற்றுகை
x
தினத்தந்தி 1 Jun 2019 11:00 PM GMT (Updated: 1 Jun 2019 7:43 PM GMT)

திருச்சியில் ரத்தான ரெயிலுக்கு ஊழியர்கள் டிக்கெட் வினியோகித்ததால் காத்திருந்து ஏமாற்றமடைந்த பயணிகள் ரெயில் நிலைய அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி,

மன்னார்குடியில் இருந்து திருச்சி வழியாக மானாமதுரைக்கு தினமும் பயணிகள் ரெயில் இயக்கப்படுகிறது. திருச்சிக்கு இந்த ரெயில் காலை 9.45 மணிக்கு வந்து காலை 10.05 மணிக்கு புறப்பட்டு செல்லும். தற்போது புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே ரெயில்வே தண்டவாள பராமரிப்பு பணியின் காரணமாக மன்னார்குடி-மானாமதுரை பயணிகள் ரெயில் சேவை திருச்சியில் இருந்து நேற்றும், இன்றும்(ஞாயிற்றுக்கிழமை) ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இது தொடர்பாக ரெயில்வே நிர்வாகம் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. மேலும் இந்த ரெயில் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் உள்ள அறிவிப்பு பலகையிலும் எழுதி வைக்கப்படவில்லை.

இந்த நிலையில் மன்னார்குடி-மானாமதுரை பயணிகள் ரெயிலில் திருச்சியில் இருந்து மானாமதுரைக்கு பயணம் செய்வதற்காக பயணிகள் பலர் நேற்று காலை திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் வந்தனர். அவர்களுக்கு இந்த ரெயில் ரத்து செய்யப்பட்டது தெரியாது என்பதால் பலர் அந்த ரெயில் செல்லும் வழித்தடங்களில் உள்ள கீரனூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் மானாமதுரைக்கு டிக்கெட் வாங்கினார்கள்.

ரெயில் நிலைய ஊழியர்களும் ரெயில் ரத்து தொடர்பாக எதுவும் தெரிவிக்காமல் பயணிகளுக்கு டிக்கெட்டுகளை வினியோகித்தனர்.

டிக்கெட் பெற்ற பயணிகள் பலரும் ரெயில் நிலைய நடைமேடைக்கு சென்றனர். ஆனால் ரெயில் எந்த நடைமேடையில் நின்று செல்லும் என்பது குறித்து அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. மன்னார்குடியில் இருந்து திருச்சி வந்ததும் அந்த ரெயில் நிறத்தப்பட்டது. இந்த நிலையில் மானாமதுரை பயணிகள் ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஒலிபெருக்கியில் அறிவிக்கப்பட்டது.

திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்ததால் பயணிகள் செய்வதறியாமல் திகைத்தனர். மேலும் ஆவேசமடைந்த அவர்கள் ரெயில் நிலைய அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த ரெயில் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், டிக்கெட் வினியோக மையத்தில் ஊழியர்கள் தவறுதலாக டிக்கெட் வினியோகித்து விட்டதாகவும், டிக்கெட் பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பயணிகள் தாங்கள் எடுத்த பயண டிக்கெட்டை கவுண்ட்டரில் செலுத்தி பணத்தை திரும்ப பெற்றனர். பின்னர் தாங்கள் செல்ல வேண்டிய ஊர்களுக்கு பஸ்களில் சென்றனர். 

Next Story