சேலம் கலெக்டர் அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம் கவுரவ கொலை செய்துவிடுவார்கள் என புகார்


சேலம் கலெக்டர் அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம் கவுரவ கொலை செய்துவிடுவார்கள் என புகார்
x
தினத்தந்தி 1 Jun 2019 10:30 PM GMT (Updated: 1 Jun 2019 9:21 PM GMT)

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தது. அவர்கள் தங்களை கவுரவ கொலை செய்து விடுவார்கள் என புகார் தெரிவித்துள்ளனர்.

சேலம், 

சேலம் சூரமங்கலம் அருகே உள்ள சேலத்தாம்பட்டி ஹவுசிங்போர்டு பகுதியை சேர்ந்தவர் சம்சுதீன் மகள் சீமாட்டி (வயது 19). அதே குடியிருப்பில் வசிப்பவர் சசி மகன் கோபி (22). ஆட்டோ டிரைவர். இவருக்கும், சீமாட்டிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கிடையே காதலாக மாறியது.

இந்த காதல் பெண்ணின் வீட்டிற்கு தெரிய வரவே அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையும் மீறி கடந்த வாரம் காதல் ஜோடி அந்த பகுதியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் நேற்று காதல்ஜோடி சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். பின்னர் அங்கிருந்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது சீமாட்டி கூறுகையில், நாங்கள் கடந்த ஓராண்டாக காதலித்து வந்தோம். பெற்றோர் எங்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டோம்.

இதையடுத்து எனது தாய் நீ எப்படி இந்து பையனை திருமணம் செய்து கொள்ளலாம் அது தவறு, உன்னை வாழவிட மாட்டேன் என கூறுகிறார். எங்களை பிரிக்க எனது பெற்றோர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். என் உயிருக்கும், கணவர் உயிருக்கும் பாதுகாப்பு இல்லை. மேலும் மாதம் மாறி திருமணம் செய்து கொண்டதால் எங்களை கவுரவ கொலை செய்து விடுவார்கள். எனவே நாங்கள் பாதுகாப்பாக வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைக்கேட்ட போலீசார் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து காதல்ஜோடி பாதுகாப்பு கேட்டு மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் புகார் கொடுத்தனர்.

Next Story