கீழ்வேளூரில் ரூ.25 ஆயிரம் புகையிலை பொருட்கள் பறிமுதல் கடை உரிமையாளர்களுக்கு அபராதம்


கீழ்வேளூரில் ரூ.25 ஆயிரம் புகையிலை பொருட்கள் பறிமுதல் கடை உரிமையாளர்களுக்கு அபராதம்
x
தினத்தந்தி 2 Jun 2019 10:45 PM GMT (Updated: 2 Jun 2019 7:02 PM GMT)

கீழ்வேளூரில் ரூ.25 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து கடை உரிமையாளர்ளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

கீழ்வேளூர்,

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கீழ்வேளூர் பகுதியில் விற்பனை செய்யப்படுகிறதா? என நாகை மாவட்ட பொது சுகாதார துறை துணை இயக்குனர் சண்முகசுந்தரம் உத்தரவின் பேரிலும், கீழ்வேளூர் தாலுகா தேவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் அகிலன் மேற்பார்வையிலும், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தியாகராஜன் (பொறுப்பு), சுகாதார மேற்பார்வையாளர் சுப்ரமணியன், களப்பணியாளர்கள் மற்றும் வலிவலம் போலீசார் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் கீழ்வேளூர், வலிவலம், நீலப்பாடி, குருக்கத்தி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின் போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் மாத்திரைகள் உள்ளிட்ட பொருட்கள் பல்வேறு கடைகளில் விற்பனை செய்யப்பட்டது கண்டறியப்பட்டது.இதை தொடர்ந்து ரூ.25 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் புகையிலை பொருட்கள் தீ வைத்து அழிக்கப்பட்டன.

மேலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடைகளின் விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

Next Story