குறுவை சாகுபடிக்கு காவிரியில் தண்ணீர் விடக்கோரி மண்வெட்டியுடன் விவசாயிகள் அரைநிர்வாண போராட்டம்


குறுவை சாகுபடிக்கு காவிரியில் தண்ணீர் விடக்கோரி மண்வெட்டியுடன் விவசாயிகள் அரைநிர்வாண போராட்டம்
x
தினத்தந்தி 3 Jun 2019 11:00 PM GMT (Updated: 3 Jun 2019 8:38 PM GMT)

குறுவை சாகுபடிக்கு காவிரியில் தண்ணீர் விடக்கோரி திருச்சியில் மண்வெட்டியுடன் விவசாயிகள் அரைநிர்வாண போராட்டம் நடத்தினர். முதல்-அமைச்சர் வீட்டை விரைவில் முற்றுகையிடுவோம் எனவும் தெரிவித்தனர்.

திருச்சி,

திருச்சி உள்பட 7 டெல்டா மாவட்டங்களில் ஜூன் மாதத்தில் குறுவை சாகுபடிக்கான பணியில் ஈடுபடுவது வழக்கம். இதற்காக ஆண்டுதோறும் ஜூன் 13-ந் தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து விடப்படும். ஆனால், அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் வருகிற 13-ந் தேதி அணை திறப்பதற்கான வாய்ப்பு இல்லை.

மேலும் காவிரி மேலாண்மை வாரியம் ஜூன் மாதம் முதல், 3 கட்டமாக 9.19 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடக அரசு காவிரியில் திறந்து விட வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால், கர்நாடக நீர்ப்பாசன மந்திரியோ, மழை பெய்து தண்ணீர் வந்தால்தான் திறப்போம் எனக்கூறி விட்டார். எனவே, காவிரியில் தண்ணீர் வருவது கேள்விக்குறியாகி விட்டது.

இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி என்பது படிப்படியாக அழிந்து வருகிறது என்றும், தமிழகத்தில் மழை இல்லாததால் கடுமையான வறட்சி நிலவுகிறது என்றும், கர்நாடக அரசு காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவுப்படி காவிரியில் தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி நேற்று திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்க வந்த விவசாயிகள் மண்வெட்டியுடன் அரைநிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர் பூ.விசுவநாதன் தலைமையில் விவசாயிகள் பலர், திருச்சி கலெக்டர் அலுவலக போர்டிகோவில் உள்ள படிக்கட்டுகளில் வேட்டி மற்றும் பனியனுடன் தோளில் மண்வெட்டியை போட்டபடி அரைநிர்வாண போராட்டம் நடத்தினர்.

அவர்களிடம் திருச்சி கண்டோன்மெண்ட் போலீஸ் உதவி கமிஷனர் பாலமுருகன், இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் ஆகியோரும் பேச்சுவார்த்தை நடத்தினர். குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் இல்லாததால், மாவட்ட வருவாய் அதிகாரி சாந்தி விவசாயிகளிடம் மனுக்களை பெற்று விசாரணை நடத்தினார்.

அப்போது, மாவட்ட கலெக்டர் மூலமாக உங்கள் கோரிக்கை, சென்னை முதல்-அமைச்சர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என சாந்தி தெரிவித்தார்.

போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர் பூ.விசுவநாதன் கூறியதாவது:-

கடந்த 5 ஆண்டுகளாக ஆளுங்கட்சி எம்.பி.-க்கள் காவிரி நீர் பெற்றுத்தருவதில் மெத்தனமாக இருந்து வந்தனர். இதனால், ஆளும் கட்சியினர் மீது நம்பிக்கை இழந்து நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் தோற்கடித்து விட்டனர்.

கர்நாடக மாநிலத்தில் காவிரியில் தண்ணீர் திறக்க மறுக்கும்போது அங்கு அனைத்து கட்சியினரும் ஒன்று சேர்ந்து விடுகிறார்கள். அதுபோல தமிழ்நாட்டில் அ.தி.மு.க.-தி.மு.க. இணைந்து காவிரியில் தண்ணீர் விட மத்திய அரசுக்கு எதிராக வலுவான முடிவெடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் வறட்சி காரணமாக வங்கி மற்றும் சொசைட்டிகளில் விவசாயிகள் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்திட வேண்டும். மேலும் குறுவை சாகுபடிக்கு காவிரி நீர் பெற்றுத்தரக்கோரி விரைவில் முதல்-அமைச்சர் வீட்டை முற்றுகையிடுவோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Next Story