சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பலத்த மழை 1 மணி நேரம் தொடர்ந்து பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி


சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பலத்த மழை 1 மணி நேரம் தொடர்ந்து பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 3 Jun 2019 10:43 PM GMT (Updated: 3 Jun 2019 10:43 PM GMT)

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று மாலை 1 மணி நேரம் தொடர்ந்து பலத்த மழை பெய்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

காரைக்குடி,

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் கடந்த சில தினங்களாக பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. கடந்த மாதம் 29–ந்தேதி கத்திரி வெயில் தாக்கம் முடிவடைந்தும், பல்வேறு இடங்களில் அதன் தாக்கம் குறையாமல் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று மாலை காரைக்குடி, தேவகோட்டை, திருப்பத்தூர், காளையார்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் மழை பெய்யத் தொடங்கியது.

காரைக்குடியில் நேற்று மாலை 4 மணிக்கு வானம் கருமேகத்துடன் காணப்பட்டு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை மாலை 5.15 வரை தொடர்ந்து பெய்ததால் காரைக்குடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் பலத்த மழை பெய்ய தொடங்கியதால் நேற்று பள்ளி திறந்த முதல் நாள் மாலையில் மாணவர்கள் வீடுகளுக்கு அனுப்ப முடியாமல் மழை நின்ற பின்னர் அவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

நேற்று பெய்த பலத்த மழையினால் இந்த பகுதியில் குளுமையான சூழ்நிலை ஏற்பட்டு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். இதேபோல் திருப்பத்தூரில் நேற்று மாலை 5 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை ½ மணி நேரத்திற்கும் மேல் பலத்த இடியுடன் பெய்ய தொடங்கியது. இதனால் பஸ் நிலையம், அண்ணாசிலை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல் காளையார்கோவிலில் நேற்று மாலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வானம் கருமேகமூட்டத்துடன் கூடி பலத்த மழை பெய்யத் தொடங்கியது.

இதனால் காளையார்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் குளுமையான நிலை ஏற்பட்டது. இதேபோல் தேவகோட்டையில் நேற்று மாலை பரவலாக மழை ½ மணி நேரத்திற்கும் பெய்ததால் குளுமையாக காணப்பட்டது. இதேபோல் சிவகங்கை மாவட்டத்தில் இளையான்குடி, சிவகங்கை, மானாமதுரை, திருப்புவனம் உள்ளிட்ட பகுதியில் நேற்று மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு குளுமையான நிலை ஏற்பட்டது.


Next Story