சேதமடைந்த பாலத்தை சரிசெய்யக்கோரி கிராம மக்கள் உண்ணாவிரதம் இருக்க முடிவு


சேதமடைந்த பாலத்தை சரிசெய்யக்கோரி கிராம மக்கள் உண்ணாவிரதம் இருக்க முடிவு
x
தினத்தந்தி 3 Jun 2019 10:53 PM GMT (Updated: 3 Jun 2019 10:53 PM GMT)

ராமநாதபுரம் மாவட்டம் பாப்புரெட்டியாபட்டியில் சேதமடைந்த பாலத்தை சரிசெய்யக்கோரி கிராம மக்கள் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களின் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளித்தனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பாப்பு ரெட்டியாபட்டி பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் திரளாக வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- எங்கள் கிராமத்திற்கு நுழையும் பகுதியில் அமைந்துள்ள பாலம் கடந்த 2 ஆண்டுகளாக இடிந்து போய் உள்ளது. நாளடைவில் பெரிய பள்ளமாக மாறிவருவதால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியவில்லை.

ரேஷன்பொருட்கள் கொண்டுவரும் லாரி வரமுடியாததால் ஊருக்கு வெளியில் லாரியை நிறுத்தி அங்குள்ள சேவைமையத்தில் ரேஷன்பொருட்கள் வாங்க வேண்டிய நிலை உள்ளது. இந்த வழியாகத்தான் பள்ளி மாணவ-மாணவிகள், கிராம மக்கள் அனைவரும் செல்ல வேண்டி உள்ளது. தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தும் இதுவரை பாலத்தை சரிசெய்யும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

உடனடியாக பாலத்தினை சரிசெய்து அச்சமின்றி நாங்கள் சென்றுவர வழிவகை செய்ய வேண்டும். இனியும் நடவடிக்கை எடுக்காவிட்டால் கிராம மக்கள் அனைவரும் சாகும்வரை உண்ணா விரதம் இருக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. முதுகுளத்தூர் தாலுகா மேலத்தூவல் பகுதியை சேர்ந்த விவசாயிகள், தங்கள் கிராமத்தில் உள்ள ஒவ்வொரு விவசாயிக்கும் வெறும் ரூ.68 மட்டுமே பயிர்காப்பீடு தொகை வந்துள்ளதாகவும், அருகில் உள்ள கிராமத்தினருக்கு ரூ.21 ஆயிரத்து 500 தொகை வந்துள்ளதாகவும், இதுகுறித்து பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று மனுகொடுத்தனர்.

இதேபோல குமரியேந்தல் பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்களுக்கு 100 சதவீத இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று கோரி மனு கொடுத்தனர். இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கலைமணி தலைமையில் வந்த விவசாயிகள் பரமக்குடி, கமுதி பகுதிகளில் நிலவும் குடிநீர் பஞ்சத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மனுகொடுத்தனர். இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

Next Story