தூத்துக்குடியில் பரபரப்பு: மனைவியை கொன்று தொழிலாளி தற்கொலை வீட்டுக்குள் பிணங்களாக கிடந்தனர்


தூத்துக்குடியில் பரபரப்பு: மனைவியை கொன்று தொழிலாளி தற்கொலை வீட்டுக்குள் பிணங்களாக கிடந்தனர்
x
தினத்தந்தி 4 Jun 2019 11:00 PM GMT (Updated: 4 Jun 2019 9:44 PM GMT)

தூத்துக்குடியில் மனைவியை கொன்று தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். வீட்டுக்குள் கிடந்த அவர்களது பிணங்களை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி தஸ்நேவிஸ் நகரை சேர்ந்தவர் முத்தையா. இவருடைய மகன் மதிக்குமார் (வயது 45) கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி அமுதா (43). இவர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள இரும்பு குடோனில் வேலை பார்த்து வந்தார்.

இவர்களுக்கு அஜித்குமார் (24), ஆதிஷ்குமார் (22) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். அஜித்குமார் திருப்பூரில் வசித்து வருகிறார். ஆதிஷ்குமார் ஓட்டப்பிடாரத்தில் தங்கி இருந்து தனியார் காற்றாலை நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் மனைவி அமுதாவின் நடத்தையில் மதிக்குமாருக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் காலை 9 மணியளவில் கணவன்-மனைவி இடையே வழக்கம்போல் தகராறு நடந்து உள்ளது. இதனால் வீட்டில் இருந்த பொருட்களை ஆங்காங்கே வீசி எறிந்துள்ளனர். சிறிது நேரத்துக்கு பிறகு அங்கு எந்தவித சத்தமும் இல்லை.

நேற்று முன்தினம் முழுவதும் வீட்டின் வெளிக்கதவு திறந்து கிடந்து உள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் மதிக்குமாரின் சகோதரி விஜயராணிக்கு நேற்று காலையில் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அவர் வீட்டுக்கு வந்து பார்த்தார். அப்போது, வீட்டின் உள்ளே மதிக்குமார் தூக்கில் பிணமாக தொங்கினார். தரையில் அமுதா பிணமாக கிடந்தார். அவர் கழுத்தில் ரத்தகாயங்கள் இருந்தன. அவரது வாயில் இருந்து ரத்தம் வழிந்து இருந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ், தாளமுத்துநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தடயவியல் நிபுணர்களும் அங்கு வந்து சோதனை நடத்தினர். அப்போது, அந்த பெண்ணின் குரல்வளை உடைந்து இருப்பதும், கழுத்தில் நகக்கீறல்கள் இருப்பதும் தெரியவந்தது. எனவே, தகராறு முற்றி மதிக்குமார் தனது மனைவியை கொன்று விட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதையடுத்து மதிக்குமார், அமுதா ஆகியோரின் உடல்களை போலீசார் கைப்பற்றி பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தூத்துக்குடி தாளமுத்துநகர் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக தற்கொலை மற்றும் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story