ரம்ஜான் பண்டிகையையொட்டி பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை


ரம்ஜான் பண்டிகையையொட்டி பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை
x
தினத்தந்தி 5 Jun 2019 10:45 PM GMT (Updated: 5 Jun 2019 7:56 PM GMT)

பெரம்பலூர்-அரியலூர் ஆகிய மாவட்டங்களில் ரம்ஜான் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தி, ஏழைகளுக்கு ஈகை செய்து கோலாகலமாக கொண்டாடினர்.

பெரம்பலூர்,

பெரம்பலூரில் ரம்ஜான் பண்டிகையை யொட்டி முஸ்லிம்கள் நேற்று காலை பெரம்பலூர் டவுன் பள்ளிவாசலில் இருந்து புறப்பட்டு ஊர்வலமாக மதரசா சாலையில் உள்ள மவுலானா மேல்நிலைப்பள்ளி ஈத்கா மைதானத்தை வந்தடைந்தனர். அங்கு அனைத்து முஸ்லிம்களும் ஒன்று கூடி சிறப்பு தொழுகை நடத்தினர். இதில் டவுன் பள்ளிவாசல் இமாம் சல்மான்ஹஜ்ரத் சிறப்பு தொழுகையை நடத்தி வைத்தார். நூர் பள்ளிவாசல் முஸ்தபா ஹஜரத், திருக்குர்ஆன் வசனமான குத்பாவை ஓதினார்.

ரம்ஜான் நோன்பின் மாண்புகள், பெருமகனார் நபி (ஸல்) ஆற்றிய இறைபணிகள், ஈகையின் அவசியம் அன்பு, சகோதரத்துவத்தை நிலை நாட்டவேண்டியதன் அவசியம் குறித்து ஹஜ்ரத்துகள் சிறப்புரை ஆற்றினார்கள். இந்த நிகழ்ச்சியில் டவுன் பள்ளிவாசல் முத்தவல்லி அல்லா பிச்சை, முதன்மை நாட்டாமை முனவர் ஷெரீப் சாகேப், உலமா சபை மாவட்டத் தலைவர் முகம்மது முனீர், மதரசா நிர்வாகி காஜா மொய்தீன், மதரசா சத்தார், தன்னார்வலர் அப்துல்லா, வக்கீல் முகமது இலியாஸ் உள்பட ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

சிறப்பு தொழுகை

மேலும் சிறுவர்-சிறுமிகளும் திரளாக கலந்து கொண்டு தொழுகை நடத்தி ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி தங்களது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர். சிறப்பு தொழுகை முடிந்தவுடன் முஸ்லிம்கள் டவுன் பள்ளிவாசலுக்கு ஊர்வலமாக வந்தனர். அங்கு பிரார்த்தனை (தூ-ஆ) நடத்திய பின்பு தங்களது வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர். துறைமங்கலம் புதுக்காலனியில் உள்ள ஜன்னத்துல் பிர்தவுஸ் பள்ளிவாசல் மற்றும் வடக்குமாதவி சாலையில் ஈத் பெருநாளை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடந்தது.

மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள லெப்பைக்குடிகாடு கிழக்கு மற்றும் மேற்கு மஹல்லா மசூதிகள், அரும்பாவூர், பூலாம்பாடி, மேலக்குணங்குடி, பெரியம்மாபாளையம், தொண்டமாந்துறை, விஸ்வக்குடி, முகம்மதுபட்டினம், வி.களத்தூர், வாலிகண்டபுரம், தேவையூர், பாடாலூர், து.களத்தூர், சுற்றுலா தளமான ரஞ்சன்குடிகோட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளி வாசல்களில் ரம்ஜான் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தி ஒருவருக்கு ஒருவர் ரம்ஜான் வாழ்த்து்களை பகிர்ந்து கொண்டனர்.

வரலாற்று சிறப்பு மிக்க

பெரம்பலூர் மாவட்டம், மங்களமேட்டை அடுத்துள்ள ரஞ்சன்குடியில் வரலாற்று சிறப்பு மிக்க கோட்டை உள்ளது. 16-ம் நூற்றாண்டின் இறுதியில் கட்டப்பட்ட இந்த கோட்டையின் வளாகத்தில் கீழ்க்கோட்டை பள்ளி வாசலும், தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள 1723-ம் ஆண்டு கட்டப்பட்ட பழமையான வாலிகண்டபுரம் சமஸ்தான் பள்ளிவாசலும் அமைந்துள்ளன. இந்த பள்ளிவாசல்களில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு ரம்ஜானையொட்டி நேற்று பள்ளிவாசலின் சுற்றுபுறம் தூய்மை படுத்தப்பட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது.

ஜெயங்கொண்டத்தில்...

இதே போல அரியலூர் நகரில் உள்ள ஜும்மா பள்ளி வாசலில் ரம்ஜான் பண்டிகையையொட்டி நேற்று காலை சிறப்பு தொழுகை நடந்தது. முத்தவல்லி நூர் முகமது தலைை-யில் நடந்த சிறப்பு தொழுகையில் ஏராளமான முஸ்லிம் ஆண்கள் மற்றும் சிறுவர்கள் புத்தாடை அணிந்து கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் ஒருவருக்கொருவர் கட்டி தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். அப்போது அங்கு வந்த அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் முஸ்லிம்களுக்கு கை கொடுத்து ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்தார்.

இதே போல அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஜூப்ளி தெருவிலுள்ள பள்ளி வாசலில் இருந்து ஏராளமான முஸ்லிம்கள் ஊர்வலமாக கடைவீதி நான்கு ரோடு, விருத்தாச்சலம் ரோடு வழியாக அம்பேத்கர் நகரில் உள்ள முஸ்லிம் சுன்னத் ஜமாத் ஈத்கா மைதானத்திற்கு சென்றனர்.

பகிர்ந்து கொண்டனர்

பின்னர் அங்கு சிறப்பு தொழுகை செய்தனர். இதற்கு ஜும்மா பள்ளி வாசல் ஜமாத் தலைவர் முகமது ஷரீப் தலைமை தாங்கினார். செயலாளர் ஷர்புதீன், ஒருங்கிணைப்பாளர் அக்பர்அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த சிறப்பு தொழுகையில் ஜெயங்கொண்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் கமாலுதீன் நன்றி கூறினார். ரம்ஜான் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட முஸ்லிம்கள் ஏழைகளுக்கு ஈகை செய்து கோலாலகமாக கொண்டாடினர். மேலும் சமூக வலைத்தளங்களான பேஸ்புக், வாட்ஸ்-அப் உள்ளிட்டவைகளில் முஸ்லிம்கள் ஒருவருக்கொருவரும், மற்ற மதங்களை சேர்ந்தவர்களும் தங்களுடைய முஸ்லிம் நண்பர்களுக்கு ரம்ஜான் வாழ்த்துகளைபகிர்ந்து கொண்டனர். 

Next Story